புதன், 11 பிப்ரவரி, 2009

தீக்குளிப்பு வேண்டாம்

இலங்கைத் தமிழர் படும் இன்னல் கண்டு கண்ணீர் சிந்தாதவர் யாருமில்லை. கண்ணீரைத் துடைக்க நீளாத கைகளும் இல்லை. அதே சமயம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு எது தீர்வு என்பதில் ஒவ்வொரு கட்சிக்கும் மாறுபட்ட அணுகுமுறை உள்ளது. இது தவிர்க்க முடியாதது. வரலாற்றின் விளைவு இது. ஆயினும் இலங்கைத் தமிழர் இன்னல் பொறுக்காது தீக்குளிக்கும் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது.

போராட்ட வடிவமாகக் கூட இந்ததீய வடிவத்தை ஆதரிக்கக் கூடாது. அனைத்து தரப்பாரும் இதனை தவறானது என கண்டிக்கதயங்கக் கூடாது. “தீக்குளிப்பு’’ என்பது உயர்ந்த பண்பாட்டின் அடையாளமாகவோ, மாபெரும் தியாகமாகவோ சித்தரிப்பது, அதனை நேரடியாகவோ மறைமுக மாகவோ ஊக்குவிப்பதாகவே அமையும்.

இந்தி எதிர்ப்புப் போரில் தமிழகத்தில் இவ்வடிவம் போற்றப்பட்டது, உணர்ச்சிகள் கொம்பு சீவிவிட பயன்படுத்தப்பட்டது முடிந்து போன வரலாறு. அப்போது, இந்தப் போக்கினை பொறுப்புள்ள தலைவர்கள் ஏற்க மறுத்து கண்டித்தே வந்துள்ளனர்.

அகில இந்திய அளவில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்க முயற்சித்த போது, இதே “தீக்குளிப்பு’’ வடிவம் எதிர்வினையாற்றியதையும் அறிவோம். தமிழ்நாட்டில் தலைவர்கள் கைது செய்யப்பட்டால், சிறைப்பட்டால், நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டால் அதற்காகத் தீக்குளிப்பது என்பது மோசமான முன்னுதாரணங்களாகும்.

எல்லா தீக்குளிப்புகளும் உணர்ச்சியின் உந்துதலாலோ, அல்லது இது ஒரு போராட்ட வடிவம் என்ற சுய பிரச்சனையோடோ செய்யப்பட்டதாக கூறமுடியுமா? ஒவ்வொரு தீக்குளிப்பு சம்பவமும் தனித்தனியே ஆய்வு செய்யப்படும் போது பல உண்மைகள் வெளியாகக்கூடும். ஆயினும் அதை இப்போது பேசுவது உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாகிவிடக் கூடும் என்பதால் அதனைச் செய்வதற்கு உகந்த நேரம் இதுவல்ல தேவையுமில்லை. உணர்வுகளை மதிப்போம்; தீக்குளிப்பை நிராகரிப்போம்.

தலைமைப் பண்பு என்பது இயக்கத்தை சரியான திசையில் நடத்திச் செல்வதில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தவறானப் போக்குகளும், செயல்களும் தலைதூக்கும்போது அதற்குக் கிஞ்சிற்றும் இடம் கொடுக்காமல் உறுதியுடன் தலையிட்டு தடுத்து நிறுத்துவது தலைமைப் பண்பின் மகுடமாகும். எனவே, இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுக்கும் எல்லா அமைப்பின் தலைவர்களும் மதிக்கத்தக்கவர்களே! அவர்கள் உயரிய தலைமைப் பண்பை பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதனைப் பயன் படுத்தி தீக்குளிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.

தேக்குமரத் தேகங்களை தீயிக்கு தின்னக் கொடுப்பது வேதனையானது. இளைஞர்களே! வேண்டாம், வேண்டாம், தீக்குளிப்பைக் கைவிடுங்கள்! போராட உங்கள் உணர்வுக் கொந்தளிப்பைக் காட்ட நூறு பாதை இருக்கிறது! களச்சாவு என்பது வேறு. தற்கொலை என்பது வேறு. முன்னது போரில் கிடைப்பது. பின்னது விரக்தியில், கோபத்தில் விளைவது. இதனை இளைஞர்கள் உணர வேண்டும். தலைவர்கள் உணர்த்த வேண்டும். தவறானப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: