வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெற... -


காஷ்மீரில் தொடர்கதையாக இருக்கும் மோதல்கள், பிரிவினைவாதம் போன்றவை முடிவுக்கு வருமா? அதற்கான வழியைத் திறக்க என்ன செய்ய வேண்டும்? மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி பதிலளிக்கிறார். சென்னையில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களுக்கான பயிலரங்கிற்கு வந்திருந்த அவர் தீக்கதிருக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இது.

காஷ்மீரின் இன்றைய நிலைமை

எவ்வாறு இருக்கிறது?

இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந் ததைவிட இப்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், இது எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்று சொல்ல இயலாது. மத்திய-மாநில அரசுகள் பெரிய அளவில் பிரச்சனைகள் வெடிக்கிறபோதுதான் விழித்துக்கொள்கின் றன. அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து அக்கறை கொள்வதில்லை. அவ்வப்போது மேலோட்டமான, சில உடனடி நடவடிக்கை கள் எடுக்கப்படுகின்றன. இந்த அணுகு முறைதான் நீடிக்கும் என்றால், மறுபடியும் பெரியதொரு பதட்டநிலை ஏற்படுமானால் அதில் வியப்பில்லை.

அடிப்படைக் காரணம், காஷ்மீர் மக்களி டையே அந்நியமாக்கப்பட்ட உணர்வு ஆழ மாக ஏற்பட்டிருப்பதுதான். அரசாங்கமோ இதனை வெறும் நிர்வாகக் கண்ணோட்டத் தில், சட்டம்-ஒழுங்கு கண்ணோட்டத்தில் மட்டுமே கையாள்கிறது என்பது இதனை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஆயுத பலத்தால் நிலைமையை மாற்றிவிடலாம் என்று நினைக்கும் அரசு, உண்மைப் பிரச்சனை களில் கவனம் செலுத்த மறுக்கிறது.

நிலைமையை மாற்ற

என்ன செய்ய வேண்டும்?

நிலைமை மேலும் மோசமடைவதிலி ருந்து காஷ்மீர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் உடனடி நடவடிக்கைகள், நீண்ட கால நடவடிக்கைகள் இரண்டுமே தேவைப் படுகின்றன. காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப் பட்ட சட்டப்பூர்வ உரிமைகளும், வாய்ப்புக ளும் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்திருப் பதால் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இனியும் தொடரக்கூடாது என்றால், அந்த ஆழ்ந்த தாக்கங்களை மாற்றத்தக்க நடவடிக்கைகள் தேவை.

மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு, அண்டை மாநிலங்களின் பாதுகாப்பு, அண் டை நாடுகளின் பாதுகாப்பு என ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்திருக்கிற பிரச் சனை இது. கடந்த பல ஆண்டுகளாக காஷ் மீர் பிரச்சனை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக் கும் இடையேயான மோதல் பிரச்சனையாக இருந்துவருகிறது. சொல்லப்போனால் நாடு விடுதலையடைந்த நாளிலிருந்தே தொடர்கிற பிரச்சனையாக இருக்கிறது. ஒருமுறையல்ல, இரண்டு முறையல்ல, ஐந்து முறைகள் காஷ் மீர் பிரச்சனையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டிருக்கிறது - கார்கில் உள்பட. இரு நாடுகளுக்கும் எல்லையில் பெரும் எண்ணிக்கையில் படைகளைக் குவித்து வைத்திருக்கின்றன. இரு நாடுகளுமே அணு ஆயுத பலம் பெற்றுள்ளன. நிலைமையின் தீவிரத்தை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக் கும் இந்தப் பிரச்சனை உள்ளிட்ட அனைத் துப் பிரச்சனைகளுக்கும் இரு நாடுகளும் அமைதியான முறையில் தீர்வு காண முன் வராவிட்டால், தெற்கு ஆசியப் பகுதி முழுக் கவே அமைதி குலையும் சூழல் ஏற்படும். ஆனால், எந்த அளவுக்கு விரைவாகவும் அக்கறையோடும் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு முனைப்புக் காட்டப்படவில்லை.

தற்போதைய சிக்கலான நிலையில் மாற்று வழிதான் என்ன? அதற்கான ஆலோசனைகளை மத்திய அரசு எந்த அளவுக்கு அக்கறையோடு அணுகுகிறது?

மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் பிரதம ரைச் சந்தித்து, பாதுகாப்புப் படையினரின் கையிலேயே காஷ்மீரை ஒப்படைப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத் தும் என்று சுட்டிக்காட்டினார்கள். நானும், காஷ்மீரில் இயங்கும் வேறுபல ஜனநாயக வாதிகளும் பிரதமரைச் சந்தித்து வெறும் கலவரப் பிரச்சனையாக மட்டுமே இதைப் பார்க்கக்கூடாது என்று எடுத்துக் கூறினோம். மக்களிடையே ஒரு நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியம், துப்பாக்கி களால் நிலைமையைச் சமாளிக்க முயல்வது அந்த நம்பிக்கை உணர்வை வளர்க்காது என்றோம்.

அதிகாரிகளை மட்டும் நம்பியிராமல், ஒட்டுமொத்த நாட்டின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவை காஷ் மீருக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆலோ சனையையும் மார்க்சிஸ்ட் கட்சி முன் வைத்தது. அரசியல் ரீதியாக அனைத்து வித மான கொள்கைகளையும் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடியதாக அப்படியொரு குழுவை அனுப்புவது ஒரு அரசியல் முன்முயற்சியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினோம். பல்வேறு தரப்பினரிடையே குழுவினர் பேசு வதும் நிலைமையை மதிப்பீடு செய்வதும், முதலில் மக்கள் மனங்களில் ஒரு நம்பிக்கை யை உருவாக்குவதற்கான முயற்சியாக அமையும் என்று கூறினோம். உடனடியாக அந்த ஆலோசனையை ஏற்க மத்திய அரசு ஏனோ தயங்கியது. ஒரு வழியாக நாடாளு மன்றக்குழுவை அனுப்புவதற்கு இரண்டு மாதங்களாகிவிட்டன. மக்களின் துயரங் களுக்கு ஆறுதல் வழங்குவதில் அக்கறை யற்ற மனநிலையைத்தான் இது காட்டுகிறது.

மிகவும் சிக்கலானதாகத் தெரிகிற இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை நோக்கிச் செல்வதை எப்படித்தான் தொடங்குவது?

இன்று காஷ்மீர் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய, வரவேற்கக்கூடிய முதல் கட்ட நட வடிக்கை எதுவாக இருக்கும் என்றால், ஒரு கணிசமான எண்ணிக்கையில் ஆயுதப்படை யினரை விலக்கிக்கொள்வதுதான். குறை வான மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத் தில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பாது காப்புப் படையினர் குவிக்கப்பட்டிருப்பது, அந்த மக்களின் மனநிலையில் எவ்வளவு ஆழ மான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்க வேண்டியதில்லை. தீவிரவாதிகள் நடமாட்டம் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று அரசாங்கமே ஒப்புக்கொள்கிறது. இந்த நிலையில் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இந்த விருப்பத்தை நிறை வேற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

அடுத்து, காஷ்மீரின் சில வட்டாரங்கள் கலவரப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப் பதை அரசு உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும். இது, ஆயுதப்படையினரின் எண் ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும்.ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் விலக் கிக்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக் களாலும் ஜனநாயக சக்திகளாலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.

அரசமைப்பு சாசனத்தின் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டால்தான் பிரச்சனை முடி வுக்கு வரும் என்று கூறப்படுவது பற்றி...?

இது நாட்டின் ஏதோ ஒரு சிறு பகுதியில் நடக்கிற ஒரு சிறு பிரச்சனையல்ல. ஒட்டு மொத்த நாடும் மக்களும் சம்பந்தப்படுகிற, மிக நீண்ட வரலாறு உள்ள ஆழமான பிரச்சனை இது. இந்தியாவோடு காஷ்மீர் இணைக்கப் பட்டபோது அந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாகக் கைவிடப்பட் டதோடும் இணைந்த பிரச்சனை இது. அந்த வாக்குறுதியின் ஒரு சட்ட வடிவம்தான் 370 வது சட்டப்பிரிவு. காஷ்மீருக்குத் தனி நிலை அளிக்கும் 370வது சட்ட பிரிவு முழுமை யாகச் செயல்படுத்தப்படவில்லை என்ப தோடு சம்பந்தப்பட்ட பிரச்சனை இது.

பாரதிய ஜனதா கட்சி அந்த சட்டத்தையே விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வற் புறுத்துகிறது. அப்படி ஒரு தனிச் சட்டம் இருப்பதால்தான் பிரச்சனை எழுகிறது என்று தலைகீழாகக் கூறுகிறது. ஆனால், அந்த சட் டம் முறையாக முழுமையாக செயல்படுத்தப் பட வில்லை என்பதுதான் பிரச்சனைக்கு ஒரு முக்கியமான அடிப்படை. அதேபோல் இது பிரிவினைவாதிகளால் ஏற்படும் பிரச் சனை, பாகிஸ்தானால் ஏற்படும் பிரச்சனை என்று பாஜக போன்ற சில அமைப்புகள் சித்தரிக்கின்றன. அதுவும் தவறுதான்.

இதில் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் அணுகுமுறை எவ்வாறு இருக்கிறது?

தற்போதைய நிலையில் மாநில அரசால் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றம் எதையும் செய்துவிட முடியாது. அடிப்படையான முயற் சிகள் மத்திய அரசிடமிருந்தே தொடங்க வேண்டும். அந்தப் பொறுப்பு மத்திய ஆட்சி யாளர்களுக்கு இருக்கிறது.

காஷ்மீர் மக்கள் மனங்களில் அந்நியமாக்கப்பட்ட உணர்வு ஏற்பட்டிருப்பது உண்மை தான். தற்போதைய அதிகார நடவடிக்கை களால் அவர்களது உணர்வுகளை மாற்றிவிட முடியாது, மாறாக மேலும் மேலும் அந்நியமாவ தற்கே இட்டுச்செல்லும். அதை தவிர்க்க வேண்டுமானால் பல்வேறு சிறப்புத் திட்டங் கள், நேர்மையான அரசியல் அணுகுமுறை கள், விரிவான நடவடிக்கைகள் தேவைப்படு கின்றன. அதற்கான முதல் கட்ட நடவடிக் கையாக பல்வேறு தரப்பினருடனும் பேசுவது, அவர்களது கருத்தை அறிவது, அதன் அடிப் படையில் ஒரு ஜனநாயக பூர்வமான முடி வுக்கு வருவது அவசியமாகிறது. மத்திய ஆட்சியாளர்கள் இதைப் புரிந்து கொண்டாக வேண்டும். அப்படி புரிய வைக்கிற பொறுப்பு தமிழ்மக்கள் உள்பட இந்தியர்கள் அனை வருக்குமே இருக்கிறது.

சந்திப்பு: அ. குமரேசன் படம்: ம.மீ. ஜாபர்

கருத்துகள் இல்லை: