திங்கள், 16 ஜூன், 2014

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்

சிரியா, உக்ரைன் விவகாரங்களை தொடர்ந்து மீண்டும் கடந்த சில நாட்களாக இராக்கில் நடக்கும் பயங்கர மோதல்கள் உலகம் முழுவதும் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்துள்ளன.கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, மனிதகுல நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்று என போற்றப்படும் இராக்கில் அமைதி இல்லை; போர், மேலும் போர், குண்டுவெடிப்புகள், மீண்டும் உள்நாட்டுப் போர்... ரத்தவெள்ளத்தில் ஆயிரமாயிரமாய் அப்பாவிகள் இரையாவது தொடர் கதையாக மாறியிருக்கிறது.மீண்டும் இதோ, இராக்கில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கும், அதற்கெதிராக செயல்படத் துவங்கியுள்ள - மிகப்பெரும் பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ள ஒரு அமைப்புக்கும் இடையில் மிகப் பெரும் மோதல் - கலவரம் வெடித்துள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், இராக்கின் தற்போதைய அரசாங்கமும், அதை எதிர்த்து பயங்கர வன்முறையை துவக்கியுள்ள அமைப்பும் - இரண்டுமே அமெரிக்காவின் கைக்கூலிகள் என்பதுதான்.

‘நியூ ஈஸ்டர்ன் அவுட்லுக் ஜர்னல்’ என்ற ஏடு மிக விரிவான ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது: ‘சிரியாவை மொத்தமாக கபளீகரம் செய்ய பெரும் முயற்சியில் இருக்கிற அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் முன்னோட்டமாக பல நாடுகளில் உள்நாட்டுப் போர்களை தூண்டிவிட திட்டமிட்டுள்ளது. 

அதில் முக்கியமான நாடு இராக். சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிய பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டு அவர்கள் மிகப் பெரும் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இவர்களுக்கு அமெரிக்காவும், அதன் கைக்கூலிகளான துருக்கி, சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் பல்லாயிரம் கோடி டாலர்களையும் மிகப் பெருமளவில் ஆயுதங்களையும் வாரி வழங்கி வருகின்றன. பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை சிரியாவுக்குள் அனுப்பிய ஏகாதிபத்திய சக்திகள் படிப்படியாக அந்தக் குழுக்களையும் ஒன்றிணைத்து மிகப் பெரும் பயங்கரவாத ராணுவமாக - அமெரிக்காவின் சொல்படி எந்த நேரத்திலும், எந்த நாட்டிற்குள்ளும் புகுந்து ரத்தவெறியாட்டத்தை நடத்தக்கூடிய கூலிப்படையாக - மாற்றுவதில் தற்போது வெற்றி பெற்றுள்ளன. அப்படி உருவாகியிருக்கும் படைதான் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் சிரியா (ஐஎஸ்ஐஎஸ்)’.

கடந்த 2007ம் ஆண்டே சர்வதேச அரசியல் நோக்கர்களில் ஒருவரான செய்மவ்ர் ஹெர்ஷ் என்பவர் எழுதிய ஒரு விரிவான கட்டுரையையும் மேற்கண்ட நியூ ஈஸ்டர்ன் அவுட்லுக் ஜர்னல் ஏடு வெளியிட்டிருக்கிறது.மத்திய கிழக்கு - வளைகுடா நாடுகள் உள்ளிட்ட எண்ணெய் வள பூமியில் நிரந்தரமாக மோதலை நீடிக்கச் செய்ய ஒரு விரிவான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாக ஈரான், சிரியா, லெபனான் போன்ற நாடுகளை - ஏற்கெனவே இராக்கை கைப்பற்றியிருப்பது போல - முழுமையாக கபளீகரம் செய்வதுதான் இத்திட்டத்தின் இலக்கு. இதற்காக ஒவ்வொரு முறையும் மேற்கத்திய நாடுகளின் ராணுவப் படைகளை அங்கு முதலிலேயே அனுப்புவது என்பதற்கு மாறாக, இந்த நாடுகளிலெல்லாம் எந்த நேரமும் ஊடுருவி பெரும் கலகங்களையும், வன்முறைகளையும் நடத்துவதற்கேற்றாற்போல் ஒரு படையை உருவாக்க திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.

ஏற்கெனவே, இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் தன்சொல்படி கேட்ட பயங்கரவாத கைக்கூலி கும்பல்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விரிவான ராணுவப் பயிற்சியும், கேட்கும் போதெல்லாம் கைநிறையப் பணமும், அதிநவீன ஆயுதங்களும் அளித்து தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.இந்த கும்பல்களுக்கு துருக்கி, சவுதி அரேபியா போன்ற பாதுகாப்பான சொர்க்கங்கள் ஏற்கெனவே தயாராக காத்திருக்கின்றன. துருக்கியின் எல்லையை பயன்படுத்தி, இராக், ஈரான், லெபனான் போன்ற நாடுகளுக்கு இந்த கும்பல்களால் எளிதாக ஊடுருவ முடியும்.செய்மவ்ர் ஹெர்ஷ், குறிப்பிட்ட இந்த விபரங்களின் தொகுப்புதான், இன்றைக்கு இராக்கில் பெரும் வன்முறையை அரங்கேற்றி வருகிற ஐஎஸ்ஐஎஸ் எனும் அமெரிக்க ஆதரவு பயங்கரவாத கூலிப்படை.இதில் இருப்பவர்கள், பல பத்தாண்டுகளுக்கு முன்பே ஆப்கனில் பின்லேடனை ஊட்டி வளர்த்த அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் பல நாட்டு பிரிவினர்தான்.

இராக்கில் சதாம் உசேனை வீழ்த்துவதற்காக, அந்நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய்க் காரணம் கூறி 2003ம் ஆண்டு படையெடுத்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். மனித குலத்தால் வெறுக்கப்பட்ட இந்த கொடிய போரில் கிட்டத்தட்ட 6 லட்சம் இராக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் ஊடகங்கள் அந்த உண்மைகளை மறைத்தன.கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இராக்கில் அமெரிக்கப் படைகள் நேரடியாக கோலோச்சின. பெயருக்கு கைக்கூலி அரசாங்கங்களும் அமைந்தன. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன், இராக்கில் தற்போது உள்ள பாதுகாப்புப் படைக்கு மட்டும் 22 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது.

அதே நேரத்தில் மேற்படி பயங்கரவாத கூலிப்படைக்கு அமெரிக்காவின் நாசகர உளவு ஸ்தாபனமான சிஐஏ, பல்லாயிரம் கோடி டாலர் நிதியைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது.இராக் அரசுப் படைகளுக்கு கடந்த ஏப்ரலில் அமெரிக்கா எப்16 ரகத்தில் 36 போர் விமானங்களை அளித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் மிகப் பெருமளவில் எந்திரத் துப்பாக்கிகளையும் வழங்கியுள்ளது. 11 மில்லியன் ரவுண்டுகள் சுடும் அளவிற்கு வெடிமருந்துகளை அளித்துள்ளது.அரசுப் படைகளுக்கு எதிராக நிற்கும் கூலிப்படைக்கும் இதைவிட அதிகமாக ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது.பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற கதைதான்.இதோ இப்போது அமெரிக்கப் படைகள், பாரசீக வளைகுடாவிற்கு புறப்பட்டுவிட்டன. இராக் உள்ளிட்ட வளைகுடா பிரதேசத்தின் அளவற்ற எண்ணெய் வளத்திற்காக, ரத்த ஆறுகளை உற்பத்தி செய்கிறது அமெரிக்கா.
                                                                                                                                                                                                 - எஸ்.பி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை: