வெள்ளி, 20 மே, 2011

2ஜி வழக்கு: கனிமொழி சரத்குமார் கைது.. திகார் சிறையில் கனி ராசா.....




2ஜி முறைகேடு வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவரை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவருக்கும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமாருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டதுடன், அவர்கள் இருவரையும் நாளை காலை 10 மணிக்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதன்பிறகு நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று மதியம் தீர்ப்பு வழங்குவார் என்று கூறப்பட்டது. இதில், கனிமொழிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

முன்னதாக, 2ஜி முறைகேட்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று குற்றம் சாட்டிய சிபிஐ, கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ஆகியோரது பெயர்களை இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்த்தது.

இந்த வழக்கில் தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என கனிமொழியும் சரத்குமாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து மே 6-ம் தேதி நடந்த விசாரணையில் கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அவர் வாதாடினார். அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



கருத்துகள் இல்லை: