ஞாயிறு, 19 நவம்பர், 2017

கம்யூனிஸ்டுகள்!

எத்தனை இரவுகள் பசியோடும் பட்டினியோடும் போராடினர். எத்தனை துப்பாக்கிச் சூடுகள், தூக்குக் கயிறு, சிறை, சித்திரவதை, குண்டாந்தடிகள். இவர்கள் சிந்திய இரத்தக் கறையை மறைக்கத்தான் சிறைச் சாலைக்கு சிவப்பு வர்ணம் பூச ஆரம்பித்தனர் என்ற வாதத்தை மறுக்க யார் இருக்கிறார்கள்? 

 கஞ்சி இல்லாதவனுக்காகவும் காலில் செருப்பு இல்லாதவனுக்காகவும் கந்தை இல்லாதவனுக்காகவும் தனது படிப்பு, பட்டம், பதவி, பட்டாடை, சொத்து சுகம் அனைத்தையும் இழந்து, பஞ்சை பராரிகளைப் போல் வாழ்ந்த அந்த ‘ பசை” பற்றற்ற துறவிகளை யார் கண்டு கொண்டனர்? 

 யார் தலையிலோ விழுந்த இடிகளை எல்லாம் தன் தலையில் தாங்கிக் கொள்ள ஓடிய கால்களை நீங்கள் ஒரு முறையேனும் பார்த்திருக்-கின்றீர்களா? எத்தனை வெடிப்புகள்? எத்தனை காயங்கள்? அவர்கள் ஓடும் பாதை மலர் படுக்கை அல்ல! 

கல்லும் முள்ளும் நிறைந்த பாதைதான். 
 அய்யோ! வலிக்கிறதே என்று என்றாவது ஒருநாள் முணு முணுத்திருப்பார்களா? வலியால் அழுதால் கூட உள்ளுக்குள்தான் அழுதிருப்பார். ஊருக்குத் தெரிய ஒரு நாளும் அழுதிருக்க மாட்டார்கள். 

 இவர்களின் லட்சியம் எல்லாம் பாலுக்கு அழாத பிள்ளை, கூழுக்கு அழாத அன்னை, படிப்பிற்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞர், நோயுக்கு அழாத மனிதர், வீட்டிற்கு, ஏங்காத குடும்பம். இதுதானே? இது உனக்குக் கிடைத்தால் எனக்கும் கிடைக்கும் இது உனக்கு கிடைக்காமல் நான் மட்டும் பெறுவதா? 

ச்சீ! ச்சீ!! அதை அனைவரும் பெற எத்தனை யுகயுகங்கள் ஆனாலும் அனைவரும் பெறும் வரை காத்திருப்போம் அனைவரும் பெறப் போராடுவோம். இவை அனைத்தும் ஒருசேரக் கிடைப்பது கனவல்ல நிஜம். நீங்களும் நானும் ஒரு சேர சிந்தித்தால் ஒரு நொடியில் சாத்தியமே ஆனால் நீங்கள்  கனவிலேயே மிதக்கும் போது உங்களை கைதூக்கிவிட இன்னும் கடினப் பாதையைத்தான் நான் கடக்க வேண்டியுள்ளது என தான் சிந்தும் வியர்வையையும், இரத்தத்தைப் பற்றியும் கவலைப்படாது ஒரு மனிதன் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறானே அவன் யார்? 

அவன்தானே அய்யா ‘கம்யூனிஸ்ட்” 

அவன் பாடுகளை எல்லாம் நமக்காகத்தானே சுமந்தான். அதைப் பார்த்தறிந்தோமா? வண்ண வண்ண மேடைகள் அமைத்து, வகைக்கொரு விளக்கேற்றி பளபளக்கும் பட்டாடை கட்டி, பலரை ஆடவிட்டு, பாடவிட்டு பொய்யை பலவாறு பேசவிட்டு எளிதாக ஏமாற்றினர். 

ஏமாந்த நம் தலையில் ‘மாவரைக்கும்” மக்கள் தலைவர்களை நம்பினோம் ஏமாந்தோம் அரிதாரத்தைக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆட்சியை அதிகாரத்தை அரியணையை யாருக்கு நாம் தந்தோம். ஆடல்காட்டி, பாடல் கூட்டி நம் செல்வங்களை எல்லாம் மூட்டை கட்டி ஏப்பம் விடும் எத்தர்களுக்குத்தான் தந்தோம். இவர்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன் மக்கள் வளத்தைப் பெருக்கினர். ஆம் தன்மக்கள் வளத்தைப் பெருக்கினர். தம்குடும்பச் சொத்துக்களையே நாட்டுக்கு அளித்த கம்யூனிஸ்ட்டுகள் எங்கே? 

அரசு சொத்துக்களைத் தங்களுக்கு என சூறையாடும் இன்றைய தலைவர்கள் எங்கே? முன்னர் எல்லாம் பெஷாவர் சதிவழக்கு கான்பூர் சதிவழக்கு மீரட் சதிவழக்கு லாகூர் சதிவழக்கு நெல்லை சதிவழக்கு, மதுரை சதி வழக்கு, சென்னை சதி வழக்கு என புகழ்பெற்ற சதி வழக்குகளில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தனர்.

 சிறையில் இருந்த பலரும் கம்யூனிஸ்ட் ஆனார்கள் அன்று. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் சிறைக்கு போகிறார்கள் இன்று கம்யூனிஸ்ட்டுகள் சிறைக்குப் போனது நாட்டுக்காக இந்தக் கழிசடைகள் சிறைக்குப் போவது திருட்டுக்காக. திகார் சிறை இன்றைய ஆட்சியாளர்களை வாவா என அழைக்கிறது. இவர்கள் எல்லாம் நாட்டிற்காக மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்கிறார்களே அதற்காகவா?

ஆம்... என்னால் முடியும்! வழிகாட்டுகிறது கியூபா கல்விமுறை

அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கல்விக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்விகூட கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கியூபாவில் தொடர்ந்து உயர்கல்வியையும் அனைவருக்கும் கிடைக்கும் ஒன்றாக மாற்றியுள்ளனர். இதுதான் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள இடதுசாரி அரசுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.


கியூபா சின்னஞ்சிறு நாடு. ஆனால் அதுபட்ட துயரமோ மாபெரிது. ஸ்பெயின் நாட்டின் காலனியாக இருநூறு ஆண்டுகள் இருந்த நிலையில், ஜோஸ் மார்டி தலைமையில் புரட்சி மூலம் 1902-ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டது. துவண்டுவிடாமல் உலக வல்லரசை எதிர்கொள்ளும் துணிவு மிக்க நாடு. அமெரிக்கா தொடுத்த நெருக்கடிகளுக்கு அடிபணியாது நிமிர்ந்து நிற்கும் நாடு. ஐம்பது ஆண்டுகட்கு மேலாக பொருளாதார முற்றுகையிட்டும் அடிபணியாதது மட்டுமின்றி, நேரிடையாகப் போரிட்டும் அமெரிக்கா வெற்றி பெற இயலாது ஒதுங்கிக் கொண்டுள்ளது கியூபா மக்களது வீரத்திற்கும், அதன் ஒப்பற்ற தலைவர்களது சீரிய தலைமைக்கும் சான்றாகும். பொம்மை அரசுகளை அமெரிக்கா, கியூபா மக்கள் மீது திணித்தது. பாடிஸ்டா என்ற கொடுங்கோலன் ஆட்சியில் மக்கள் பட்ட துயர் சொல்லி மாளாது.

கல்வியைத் தனியார்க்கு தாரை வார்த்தது மட்டுமின்றி, அரசுக் கல்விக்கூடங்கள் புறக்கணிக்கப்பட்டன. இது தானே நம் நாட்டில் இன்றைய நிலை. இருநூறு ஆண்டுகட்கு மேலான ஹவானா பல்கலைக் கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டு, அவ்விடத்தில் ஹெலிகாப்டர் தளத்தை நிறுவினான் பாடிஸ்டா. சுதந்திர தாகம் எடுத்த கியூபா மக்களால் சே குவேரா வழிகாட்டுதலில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சி வழியே 1959-ஆம் ஆண்டில் மக்களாட்சி நிறுவப்பட்டது.

புரட்சி அரசு கல்வி சீர்திருத்தத்திற்கு முதலிடம் கொடுத்தது. அருட்தந்தை ஜோஸ் அகஸ்டின் கபல்லரோவும் அவரது சீடர் அருட்தந்தை பெலிக்ஸ் வரேலாவும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே கியூபக் கல்வி முறையையொட்டி பல திட்டங்களைத் தீட்டியிருந்தனர். அவற்றையும், பாலோ ப்ரையரே வகுத்த தர்க்கவழிக் கல்விமுறையையும் ஒருங்கிணைத்து புதிய கியூபக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டது. எழுத்தறிவு இயக்கத்தின் மூலம், இரண்டே ஆண்டுகளில் அனைவரும் கற்றவர் என்ற நிலையை உருவாக்கி, யுனெஸ்கோவின் சான்றிதழும் பெற்று உலக சாதனை படைத்தது புரட்சி அரசு.

லடி, ளi யீரநனடி( லநள, ஐ உயn) என்ற ப்ரையரேயின் கோஷத்தை முன்வைத்து படித்தவர் அனைவரும் நாடு முழுவதும் சென்று கல்வி பரப்பினர். வெறும் படிக்கத் தெரிவதுடன் சிந்தித்துக் கற்கவும், வினா எழுப்பவும், வினாக்களுக்கு விடைகாணவும் அறியும் வகையில் இவ்வெழுத்தறிவு இயக்கம் நடைபெற்றது. இதற்காகப் பல நூல்கள் வெளியிடப்பட்டன. இயக்கத்தில் பங்குபெற்றோர் ஒவ்வொருவரும் கையில் லாந்தரும், புத்தகப் பையையும் எடுத்துக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றியதை உலக நாடுகள் பலவும் பாராட்டின.

கியூபாவின் முயற்சி 11 மொழிகளில் யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டது இத்திட்டத்தின் சீர்மையைக் காட்டுகின்றது. நாமும் அறிவொளி இயக்கம் தொடங்கி அரைகுறையாகக் கைவிட்டு, தொடங்கிய நிலைக்கே சென்றதை நினைவு கூருவது அவசியம் . வளர்ந்த நாடுகளான நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளும் கியூபா எழுத்தறிவு முறையை அறிமுகப்படுத்தின என்பது வரலாறு. குறைந்த விலையில் நூல்கள் வெளியிட்டும் , ஊர் தோறும் நூலகங்கள் அமைத்தும், ஆண்டு தோறும் நூற்சந்தை நடத்தியும், அவற்றையொட்டி சர்வதேசக் கல்விக் கருத்தரங்குகள் நடத்தியும், எழுத்தறிவு இயக்கம் தொய்வு அடையாமல் சிறந்தோங்க வழி செய்யப்பட்டது. அந்நாட்டிலுள்ள ஐந்து அரசுத் தொலைகாட்சிகளில் இரண்டு கல்விக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டன. இவ்வியக்கம் நடைபெறும்பொழுது ஜான் கென்னடி தனது பன்றி வளைகுடாப் போரைத் தொடங்கினார் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பாடிஸ்டாவால் இடிக்கப்பட்ட ஹவானா பல்கலைக்கழகம் புதுப்பிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு பல்கலைக் கழகம், ஒரு மருத்துவப் பள்ளி என்று தொடங்கப் பெற்று, உயர்கல்வியும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ருniஎநசளயடளையவiடிn டிக ருniஎநசளவைல நுனரஉயவiடிnஎன்று அழைக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பல்லாயிரம் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டு தம் நாட்டிற்குடுமின்றி,உலகம்முழுவதும்இலவச மருத்துவ சேவையில் ஈடுபடச் செய்தமை மிக உயர்ந்த மனித நேயச் செயல் என்றால் மிகையாகாது.

விடுதலையின் வழிகாட்டியாகவும் , விடுதலையைத் தக்க வைக்கவும் கல்வி தேவையாதலால், தொடர்ந்து மிகச்சிறந்தகல்வியைகியூபாமக்களுக்கு வழங்குவது புரட்சி அரசின் தலையாய பணியென்று பிடல் காஸ்ட்ரோ கூறியதை நினைவு கூர வேண்டும்

கதை சொல்லுமா கைபேசிகள்? ஆ.காட்சன்

‘அந்தக் காலம் நன்றாகத்தான் இருந்தது’ என்று வாட்ஸ்அப்பில் படித்து ரசித்துவிட்டு, மீண்டும் அடுத்த நொடியிலேயே இந்தக் காலத்துக்கு மாறிவிடும் நம் மனதை ‘டிஜிட்டல் மனது’ என்றுதான் அழைக்க வேண்டும்.

குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பே, வீட்டிலேயே கற்கத் தொடங்கி விடுகிறார்கள். குறிப்பாக, குழந்தைப் பருவத்தில் யாரிடம் அதிக நேரம் செலவழிக்கின்றார்களோ, அவர்கள்தான் முதல் ஆசிரியர்கள். அவர்கள் கற்றுக்கொள்வதில் நல்லது - கெட்டது என எல்லா விஷயங்களுமே உள்ளடங்கும்.
முன்பெல்லாம் குழந்தைகள் தாத்தா - பாட்டிகளுடன் நேரத்தைச் செலவழிக்கும் வாய்ப்பு இருந்தது. அவர்களும் குழந்தை கள் சளைக்காமல் கேட்கும் கேள்விகளுக்குத் தங்களுக்குத் தெரிந்தவரை அறிவுபூர்வமாகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். எனக்குத் தாத்தா உடனான ஒவ்வொரு தருணமும் நிச்சயமாக சிந்தனையைத் தூண்டியிருக்கிறது. அவர் அந்தக் காலகட்டத்தின் செய்திகளையும் கூட எனக்குக் கதையாகச் சொல்லியிருக்கிறார். “ஜப்பான்காரன் ஏரோபிளேன்ல இருந்து அமெரிக்கக் கப்பல்கள் மேல குண்டு போடும்போது ஒரு கப்பலை மட்டும் நெருங்க முடியல. கடைசில ஒரு ஜப்பான்காரன் குண்டு நிரப்புன ஏரோபிளேன் கப்பல் புகைபோக்கிக்கு உள்ள விழவச்சிக் கப்பலை நொறுக்கிட்டான்” என்று இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகளை என் தாத்தா கதையாகச் சொல்லி யிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்புதான் அவர் சொன்னது ‘பேர்ல் ஹார்பர்’ சம்பவம் என்பது, ஆங்கிலப் படம் மூலம் எனக்குத் தெரியவந்தது. ஆனாலும், எனது குழந்தைப் பருவத்தில் கற்பனையில் உருவாக்கியிருந்த பிம்பத்தை எந்த ஆங்கிலப் படமும் காட்டிவிட முடியாது. இன்றைக்கு, 24 மணி நேர செய்தி சேனல்களும் அழுது வடிந்துகொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்களும் தாத்தா - பாட்டிகளின் நேரத்தைத் தின்றுகொண்டிருக்கின்றன. குழந்தைகளும் கார்ட்டூன் படங்கள், தொடுதிரைக் கைபேசிகளின் விளையாட்டு மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கொண்டிருக் கிறார்கள்.

பள்ளிக் குழந்தைகளின் செய்முறைக் கல்வி, பெற்றோரை ஸ்டிக்கர்கள் வாங்கவைத்து, பிள்ளைகளை அதை ஒட்டவைப்பது என்ற அளவில்தான் உள்ளது. இன்னும் ஒருபடி மேலே போய் ‘விர்ச்சுவல் லேர்னிங்’ (virtual learning) என்ற பெயரில் கிரிக்கெட் விளையாடுவது முதல் வனவிலங்குகள் சரணாலயத்தைச் சுற்றிப்பார்ப்பது வரை ஸ்மார்ட் போனிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறோம்.

கிடைக்கும் நேரங்களில் திறன்வளர்ச்சி வகுப்புகளுக்குத் திணித்து அனுப்பிவிட்டால் மட்டும் நம் கடமை முடிந்துவிடுவதில்லை. கற்றல் வீட்டிலுள்ள, அக்கம்பக்கத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் இருந்து தான் ஆரம்பிக்கிறது. கார்ட்டூன்கள் மற்றும் வீடியோக்களில் கற்பனைக் காட்சிகளைக் கதையுடன் நேரடியாகவே வழங்கிவிடுவதால் சுயமா கக் கற்பனை செய்யும் திறன் மழுங்கிவிடும். ஆனால், கதைகளைக் கேட்கும்போது கற்பனை உலகத்தை அவர்களாகவே விரித்துக்கொள்ளும் திறன் உருவாகும்.

பக்கத்து வீட்டுப் பையன் இசைப் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறான் என்பதற்காக நன்றாகப் படம் வரையும் பையனை இசைப் பயிற்சிக்கு அனுப்பும் சூழலில் நாம் இருக்கிறோம். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேவையைத் தெரிந்துகொள்வதைவிட, தங்கள் விருப்பத்தையும் உலகின் எதிர்பார்ப்பையும் திணிப்பதையே விரும்புகிறார்கள்.

மற்றவர்களின் மனநிலை, விருப்பங்கள் மற்றும் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கிறது என்பதையும், மற்றவர்களின் மனவோட்டங்கள் தன்னைப் போலேவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதான புரிதல் ஐந்து வயதைத் தாண்டிய எல்லா குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும். இதைப் பற்றி விவரித்த புகழ்பெற்ற கோட்பாடுதான் ‘தியரி ஆஃப் மைண்ட்’ (Theory of mind). இந்த மனநிலையானது ‘ஆட்டிசம்’ மற்றும் ‘மனச்சிதைவு’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைபாடாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இதனால்தான் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உலகத்திலிருந்து மற்றவர்களைப் பிரித்தறிய முடிவதில்லை. இன்றைக்கு ஸ்மார்ட் போன்களையும் சமூக வலைதளங்களையும் அதிக அளவில் உபயோகித்து வரும் குழந்தைகளும் இதைப் போன்ற ஒரு மனநிலைக்குத்தான் மாறிவருகிறார்கள். அவர்களது பேச்சுத் திறனிலும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பிரதிபலிக்கும் திறனிலும் பெரிய அளவில் மாற்றங்கள் அதை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.

‘அந்தக் காலம் நன்றாகத்தான் இருந்தது’ என்று வாட்ஸ்அப்பில் படித்து ரசித்துவிட்டு, மீண்டும் அடுத்த நொடியிலேயே இந்தக் காலத்துக்கு மாறிவிடும் நம் மனதை ‘டிஜிட்டல் மனது’ என்றுதான் அழைக்க வேண்டும். ரோபோக்களை விஞ்ஞான பரிசோதனைக்கூடங்களில் மட்டுமல்ல, வீடுகளிலும் உருவாக்கிவருகிறோம் என்பது தான் இன்றைய தாத்தா - பாட்டிகளுக்கும், பெற்றோர்களுக்கும் மனநல மருத்துவ உலகம் விடுக்கும் ஓர் எச்சரிக்கை.
- ஆ.காட்சன், மனநல மருத்துவர்,
உதவிப் பேராசிரியர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி,
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com