புதன், 19 ஜனவரி, 2011

“மன்னிக்க முடியாத பொய்யும்” முரசொலியின் அக்மார்க் நெய்யும்

பொங்கல் - தமிழ்ப்புத் தாண்டை யொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் கூறப்பட்டிருந்த விபரங்களை மறுத்து முரசொலி ஏடு “மன்னிக்க முடியாத பொய்” என்ற தலைப்பில் முக்கால் பக்க அளவிற்கு பெட்டிச் செய்தி ஒன்றை எழு தியுள்ளது.

பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டை யொட்டி தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ‘கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் கூடுதல் மழை பொழிந்து இந்த ஆட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளது. இயற்கை!’. என்று பெருமிதமாகக் குறிப் பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், குமரி உள் ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அரசு அறி வித்துள்ள நிவாரணம் கிடைக்கவில்லை என்றும், அளிக்கப்பட்டுள்ள நிவாரணம் போதாது என்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மறியல் உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்ற னர். இதுவும் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் விஷயம் தான் போலிருக்கிறது.

2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை 5,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலுக்கு தமிழக போலீஸ் டிஜிபி மறுப்புத் தெரி வித்துள்ளார் என்று முரசொலி கூறியுள் ளது. பி. சாய்நாத் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் தேசிய குற்றப்பதிவு ஆணையம் தரும் தகவல்களின் அடிப்படையில்தான் இந்தப் பிரச்சனையை ஆய்வு செய்து வருகின்றனர். தேசிய அளவில் விவசாயிகள் தற்கொலை குறித்து தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலை மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் நாடாளுமன்ற மாநிலங்களவையில் (நவ.30,2007) ஒப்புக்கொண்டுள்ளார்.

போலீஸ் தரப்பு வாதத்தை மட்டுமே இதற்கு வலுவான மறுப்பாகக்கொள்ள முடியாது. காரணம், விவசாயிகள் - நெசவாளர்கள் மற்றும் கூலித் தொழி லாளர்கள் வறுமை மற்றும் தொழில் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டாலும் வயிற்றுவலி, கால்வலி என்றே முதல் தகவல் அறிக்கையில் குறிப்பது போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சிகளில் ஒன்று. சமயங்களில், குடும்பப் பிரச்சனை, கள்ளக்காதல், என்றெல்லாம் பிரச்சனையை திசை திருப்புவதிலும் காவல்துறையினர் கைதேர்ந்தவர்கள். தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் தகவல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரியுள்ளதை செய்ய முன்வருமா தமிழக அரசு?

கடன் வலையில் சிக்கிய விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே, விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று முரசொலி கூறுகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது உண்மை. ஆனால் இந்த தள்ளுபடியால் பயிருக்குக் கடன்வாங்கியிருந்த சிறு, குறு விவசாயிகளை விட டிராக்டர், போரிங், மோட்டார் போன்றவற்றை வாங்கியிருந்த பெரிய விவசாயிகளே அதிக பலன் பெற்றனர் என்பதும் அதை விட உண்மை. தமிழகத்தில் விவசாய நிலப்பரப்பு சுருங்கி வருவதும், நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மை. தமிழ்நாட்டில் விவசாயமானியக் கோரிக்கையின் போது நெல் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த இலக்கு இதுவரை எட்டப்பட்டதில்லை. அப்படி தமிழகத்தில் நெல் உற்பத்தி அபரிமிதமாகப் பெருகியிருந்தால் பொது விநியோக முறைக்கு மற்ற மாநிலங்களிலிருந்து அரிசி வாங்குவது ஏன்? அந்த அரிசி, ரேசன் அரிசி என நாமகரணம் சூட்டப்பட்டு வேறு சில மாநிலங்களுக்குக் கடத்தப்படுவது தனிக்கதை.

தமிழ்நாட்டில் வேளாண் விளை நிலங்கள் குறிப்பாக, நஞ்சை நிலங்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது என்பதை தமிழக அரசு மறுக்க முடியுமா? சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மட்டும் 12,000 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தொழிற்சாலை, நகர விஸ்தரிப்பு, மனை வணிகம் போன்ற காரணங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதும் இதனால் நெல் உற்பத்திக் குறைவதும் கண்கூடு.

இந்தப் பின்னணியில்தான் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நெல் போன்ற முக்கிய பயிர்களின் உற்பத்தித் திறனை வட்டார வாரியாக ஆராய்ந்து திட்டம் வகுத்து அதிகபட்ச உற்பத்தித் திறனை எட்ட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலப்பரப்பு சுருங்குவதால்தானே, சாகுபடியில் உள்ள நிலத்தில் உற்பத்தித் திறனை பெருக்க யோசிக்கப்படுகிறது என்று கேட்டால், இது மன்னிக்க முடியாத பொய் என்று துள்ளிக் குதிக்கும் முரசொலி,

சர்க்கரை வணிகத்தில் முன்பேர வர்த்தகத்தை மீண்டும் புகுத்தி வர்த்தகச் சூதாடிகளுக்கு வளம் சேர்க்கிறது திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு,. ஆனால் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. இதே போன்று நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ. 1,500ம் மோட்டா ரகத்திற்கு ரூ. 1,400ம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையையும் அரசு புறக்கணிக்கிறது.

கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும், நகரங்களை நோக்கி தொழிலாளர்கள் பிழைப்புத் தேடி இடம் பெயர்வதும் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் குறியீடு என்பதையாவது முரசொலி ஏற்றுக்கொள்ளுமா!

விவசாயத் தொழிலாளர் நல வாரியம் குன்றிக்கிடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளதையும் முரசொலி குறை கூறியுள்ளது. உண்மை தான் விவசாயத் தொழிலாளர்களின் நல வாரியம் மட்டுமின்றி தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான நல வாரியங்கள் நலம் குன்றித்தான் உள்ளன.

இந்த வாரியத்தில் சுமார் ஒன்றேமுக்கால் லட்சம் பேர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் நல வாரிய அலுவலகம் துவக்கப்பட வேண்டும். கல்வி, திருமணம், விபத்து, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை எத்தனை பேருக்கு எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட முரசொலி தயாரா?

உதாரணமாக, பழங்குடியினர் தமிழ்நாட்டில் சுமார் ஆறரை லட்சம் பேர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நலவாரியத்தில் இதுவரை 24 ஆயிரம் குடும்பத்தினர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் பலன் எதுவும் பெரிதாகக் கிடைப்பதில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

கோவை செம்மொழி மாநாட்டில் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்ட மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மாற வேண்டும். உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரவையில் வலுவான இலாகாக்களை கேட்டுப் பெறுவதில் காட்டிய முனைப்பில் ஒரு பகுதியையாவது திமுக இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் காட்டியது உண்டா?

விவசாயிகளின் நிலை குறித்து எடுத்துரைப்பது முரசொலிக்கு மன்னிக்க முடியாத பொய்யாகத் தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இவர்கள் முன்வைக்கும் அபத்த வாதங்களும் நீரா ராடியா உரையாடலும் தான் உண்மையிலும் உண்மை போலிருக்கிறது.

- மதுரை சொக்கன்.

கருத்துகள் இல்லை: