ஞாயிறு, 19 நவம்பர், 2017

கம்யூனிஸ்டுகள்!

எத்தனை இரவுகள் பசியோடும் பட்டினியோடும் போராடினர். எத்தனை துப்பாக்கிச் சூடுகள், தூக்குக் கயிறு, சிறை, சித்திரவதை, குண்டாந்தடிகள். இவர்கள் சிந்திய இரத்தக் கறையை மறைக்கத்தான் சிறைச் சாலைக்கு சிவப்பு வர்ணம் பூச ஆரம்பித்தனர் என்ற வாதத்தை மறுக்க யார் இருக்கிறார்கள்? 

 கஞ்சி இல்லாதவனுக்காகவும் காலில் செருப்பு இல்லாதவனுக்காகவும் கந்தை இல்லாதவனுக்காகவும் தனது படிப்பு, பட்டம், பதவி, பட்டாடை, சொத்து சுகம் அனைத்தையும் இழந்து, பஞ்சை பராரிகளைப் போல் வாழ்ந்த அந்த ‘ பசை” பற்றற்ற துறவிகளை யார் கண்டு கொண்டனர்? 

 யார் தலையிலோ விழுந்த இடிகளை எல்லாம் தன் தலையில் தாங்கிக் கொள்ள ஓடிய கால்களை நீங்கள் ஒரு முறையேனும் பார்த்திருக்-கின்றீர்களா? எத்தனை வெடிப்புகள்? எத்தனை காயங்கள்? அவர்கள் ஓடும் பாதை மலர் படுக்கை அல்ல! 

கல்லும் முள்ளும் நிறைந்த பாதைதான். 
 அய்யோ! வலிக்கிறதே என்று என்றாவது ஒருநாள் முணு முணுத்திருப்பார்களா? வலியால் அழுதால் கூட உள்ளுக்குள்தான் அழுதிருப்பார். ஊருக்குத் தெரிய ஒரு நாளும் அழுதிருக்க மாட்டார்கள். 

 இவர்களின் லட்சியம் எல்லாம் பாலுக்கு அழாத பிள்ளை, கூழுக்கு அழாத அன்னை, படிப்பிற்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞர், நோயுக்கு அழாத மனிதர், வீட்டிற்கு, ஏங்காத குடும்பம். இதுதானே? இது உனக்குக் கிடைத்தால் எனக்கும் கிடைக்கும் இது உனக்கு கிடைக்காமல் நான் மட்டும் பெறுவதா? 

ச்சீ! ச்சீ!! அதை அனைவரும் பெற எத்தனை யுகயுகங்கள் ஆனாலும் அனைவரும் பெறும் வரை காத்திருப்போம் அனைவரும் பெறப் போராடுவோம். இவை அனைத்தும் ஒருசேரக் கிடைப்பது கனவல்ல நிஜம். நீங்களும் நானும் ஒரு சேர சிந்தித்தால் ஒரு நொடியில் சாத்தியமே ஆனால் நீங்கள்  கனவிலேயே மிதக்கும் போது உங்களை கைதூக்கிவிட இன்னும் கடினப் பாதையைத்தான் நான் கடக்க வேண்டியுள்ளது என தான் சிந்தும் வியர்வையையும், இரத்தத்தைப் பற்றியும் கவலைப்படாது ஒரு மனிதன் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறானே அவன் யார்? 

அவன்தானே அய்யா ‘கம்யூனிஸ்ட்” 

அவன் பாடுகளை எல்லாம் நமக்காகத்தானே சுமந்தான். அதைப் பார்த்தறிந்தோமா? வண்ண வண்ண மேடைகள் அமைத்து, வகைக்கொரு விளக்கேற்றி பளபளக்கும் பட்டாடை கட்டி, பலரை ஆடவிட்டு, பாடவிட்டு பொய்யை பலவாறு பேசவிட்டு எளிதாக ஏமாற்றினர். 

ஏமாந்த நம் தலையில் ‘மாவரைக்கும்” மக்கள் தலைவர்களை நம்பினோம் ஏமாந்தோம் அரிதாரத்தைக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆட்சியை அதிகாரத்தை அரியணையை யாருக்கு நாம் தந்தோம். ஆடல்காட்டி, பாடல் கூட்டி நம் செல்வங்களை எல்லாம் மூட்டை கட்டி ஏப்பம் விடும் எத்தர்களுக்குத்தான் தந்தோம். இவர்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன் மக்கள் வளத்தைப் பெருக்கினர். ஆம் தன்மக்கள் வளத்தைப் பெருக்கினர். தம்குடும்பச் சொத்துக்களையே நாட்டுக்கு அளித்த கம்யூனிஸ்ட்டுகள் எங்கே? 

அரசு சொத்துக்களைத் தங்களுக்கு என சூறையாடும் இன்றைய தலைவர்கள் எங்கே? முன்னர் எல்லாம் பெஷாவர் சதிவழக்கு கான்பூர் சதிவழக்கு மீரட் சதிவழக்கு லாகூர் சதிவழக்கு நெல்லை சதிவழக்கு, மதுரை சதி வழக்கு, சென்னை சதி வழக்கு என புகழ்பெற்ற சதி வழக்குகளில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தனர்.

 சிறையில் இருந்த பலரும் கம்யூனிஸ்ட் ஆனார்கள் அன்று. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் சிறைக்கு போகிறார்கள் இன்று கம்யூனிஸ்ட்டுகள் சிறைக்குப் போனது நாட்டுக்காக இந்தக் கழிசடைகள் சிறைக்குப் போவது திருட்டுக்காக. திகார் சிறை இன்றைய ஆட்சியாளர்களை வாவா என அழைக்கிறது. இவர்கள் எல்லாம் நாட்டிற்காக மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்கிறார்களே அதற்காகவா?

கருத்துகள் இல்லை: