வியாழன், 9 ஜூன், 2011

கொள்ளைக்கும், காவலுக்கும் காங்கிரஸ்தான் பொறுப்பா?





உலகம் கண்டிருக்காத புது அனுப வத்துடன், ஊழல் இந்தியாவில் அதிகரித் திருக்கிறது. தோண்டத் தோண்ட வெளி வரும் ஒன்றாக அவதாரம் எடுத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் சிறையில் அடைக் கப்பட்ட காலம் மலையேறி, இன்றைய அமைச்சர்கள், அவர்கள் ஆட்சியிலேயே ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி, அதைத் தொடர்ந்து, பதவியை ராஜினாமா செய்வதும், பின் சிறைக்கு செல்வதும், அதனைத் தொடர்ந்து அவர் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் சிறைபுகுவதும், இந்திய வரலாறு கண்டிராத ஒன்று. காங்கிரஸ் தலைவர் களான அசோக் சவாண், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலிலும், சுரேஷ் கல்மாடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது ஒதுக்கீடு செய்த பணத்தில் ஊழல் செய்த விவகாரத்திலும் சிக்கியுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசோக் சவாண் மீதான விசாரணை தீவிரப்படவில்லை. ஆதர்ஷ் ஊழல் குறித்த விவரங்கள் தீப்பி டித்து எரிந்து நாசம் ஆனதாக வெளிவந்த தகவல், ஊழல் குறித்த செய்தியை விடவும் பேரதிர்ச்சியைத் தருகிறது. திமுக தலைவர் களான ஆ. ராசா, மு. க. கனிமொழி ஆகியோர் கைதைத் தொடர்ந்து, தயாநிதி மாறன் மீதான புகார்கள் தீவிரம் பெற்று வருகின்றன.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக, தமிழ்நாட்டில் திமுக சந்தித்த சரிவு, காங் கிரஸையும் கீழே இழுத்துச் சென்றுள்ளது. புதுவைப்பிரதேசத்திலும் இதன் தாக்கத்தை உணர முடிகிறது.

காங்கிரஸ் கட்சி, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற பழமொழியைப் போல், தானே கொள்ளைக்கும், காவலுக்கும் பொறுப்பாக இருந்து நாட்டை ஏமாற்றக் கற்றுக் கொண்டதோ என்ற சந்தேகம் தவிர்க்க முடியவில்லை. கடந்த காலத்தில் போபர்ஸ் ஊழல், பங்குச்சந்தை ஊழல் உள் ளிட்ட பலவற்றிலும், ஆட்சியதிகாரம் கைமா றிய நிலையில்தான், காங்கிரஸ் கட்சி தலை வர்கள் மீது சிபிஐ விசாரணை முன் வைக்கப் பட்டது. ஆனால் இன்று ஆட்சியில் இருக் கும் போதே அரங்கேறுவது, வியப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை, எங்கோ ஏமாற்றப்படு கிறோமோ என்ற கேள்வியும் இணைந்தே உருவாகிறது. இந்த சதியில் மாநில பிராந் தியக் கட்சிகள் பாதிக்கப் பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு கவலை இல்லை என்பதையும் காண முடிகிறது. உதாரணத்திற்கு, தமிழகத் தில் திமுக சிக்கிக் கொண்டு திணருகிறது. மற்றொரு புறம், உத்தரப்பிரதேசத்தில் மாயா வதி ஆட்சிக்கு எதிராக ராகுல் காந்தியே முன் நின்று போராட்டம் நடத்துகிறார். மாயாவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கேட்காமலேயே மத்திய ஆட்சிக்கு தனது ஆதரவை நிபந்தனையின்றித் தந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. விரைவுச் சாலை வசதிக்கான திட்டங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான சட்டங்களையும் உருவாக்கியதும், தீவிரம் காட்டுவதும் காங்கிரஸ் - மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கை யுடன் இணைந்தது. அந்த பொருளாதாரக் கொள்கையை ஒரு மாநிலக் கட்சி அமலாக் கினால், அதற்கான எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி முன் நின்று நடத்துவது தன்னை நேர் மையாளர் என்று காட்டிக் கொள்வதற்கான ஏற்பாடு தவிர வேறென்ன இருக்க முடியும்.

இந்தப் பின்னணியில் இருந்தே அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு உண்ணா விரதத்தையும், பாபா ராம்தேவ் என்ற யோகா குரு நிலையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். காரரின் உண்ணாவிரதத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஹசாரேயின் உண்ணா விரதம், 50 தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. அப்போது லோக்பால் மசோதாவை விரைவில் தயாரிப்பதற்கான குழு அமைத் தல் என்ற நாடகத்தை காங்கிரஸ் நடத்தியது. அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள், பல புகார்களுக்கு உள்ளான வழக்கறிஞர்கள், அரசு சாரா நிறுவனத்தின் பிரதிநிதிகள் இடம் பெற்றனர். இது மக்களுக்கு நம்பிக்கை அளிக் காதது மட்டும் அல்ல, ஊழல் குறித்த எதிர்ப் பை மழுங்கச் செய்வதாகவும் இருந்தது. ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு, மின் னணு மற்றும் அச்சு ஊடகங்கள் கொடுத்த ஆதரவும், நடுத்தர மக்கள் தந்த ஆதரவும் நீர்த்துப் போவதாக அமைந்ததையும் காண முடிந்தது. காங்கிரஸை மட்டும் எதிர்த்து வந்த ஹசாரே, ஒருகுறிப்பிட்ட காலம் வரை பா.ஜ.க குறித்து எதுவும் பேசவில்லை. குஜராத் சென்ற இடத்தில், மோடியின் தலை மையிலான பாஜக அரசு, மீது சில விமர்சனங் களை முன்வைத்தார். அதுவும் சஞ்சீவ் ராஜேந்திரன் பட் என்ற காவல் துறை அதி காரி, மோடி குறித்தும், பா.ஜ.க தலைமை யிலான அனைத்து இந்துத்துவா அமைப்புக ளும், குஜராத் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டதை அம்பலப்படுத்திய நிலை யில், ஹசாரே, ஊழலிலும் மோடி அரசு மலிந்து கிடக்கிறது என்ற விமர்சனத்தை முன்வைத்தார். ஹசாரே பா.ஜ.க வையும் தாக்கத் துவங்கிய பின்னரே, தற்போது, பாபா ராம்தேவ் அவதாரம் எடுத்து இருக்கிறார். இதில் ஏற்கனவே உருவாக்கப் பட்ட, ஊழல் எதிர்ப்பு ஆதரவு தளத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அரசியல் நோக்கம் புதைந்து கிடக்கிறது.

கடந்த காலத்தில் பாபா ராம்தேவ் பகி ரங்கமாக விஸ்வ‘ஹிந்து பரிஷத் மேடை களில் வலம் வந்தவர் என்பது உண்மை. விமர்சிப்பவர்களை, பாபாவின் சீடர்கள் என்ற போர்வையில் தக்க வைக்கும் ஏற்பாட்டை பா.ஜ.க கடந்த காலங்களில் செய்து தந்திருக் கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் களில் ஒருவரான பிருந்தா காரத், பாபா ராம்தேவ் தயாரித்து வழங்கும் மருந்துகளில், மனிதனின் எலும்புகளும், விலங்குகளின் எலும்புகளும் பயன்படும் தகவலை அறிந்து, உலகிற்கு கொணர்ந்தார் என்பதற்காக தாக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு அலுவலகம் தாக்கப்பட்டது. இச்செயல் களுக்கு ஆதரவாக, ஆர்.எஸ்.எஸ். அமைப் பினர், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான போராட் டங்களில் ஈடுபட்டனர். இந்த பின்னணியில் இருந்தே, கொஞ்ச காலம் பரபரப்பை ஏற்படுத் தாது இருந்த ராம்தேவ் இப்போது, பாஜகவை பலப்படுத்தும் நோக்கத்துடன் ஊழலுக்கு எதிரான போராட்டங்களைத் துவக்கியுள்ளார். கடந்த காலத்தில் பா.ஜ.க ஆட்சியின் போது சவப்பெட்டி ஊழலின் போதோ, கர்நாடகத் தில் எடியூரப்பா தனது வாரிசுகளுக்கு இடம் ஒதுக்கி குதூகலப்பட்ட போதோ ராம்தேவ் எங்கே இருந்தார் என்பதும் கேள்விக்கு உள்ளாகிறது. தற்போது தங்கள் துறைகளின் வேலைகளை மத்திய அமைச்சர்கள், கபில் சிபல், சுபோத் காந்த் சகாய், பவன் குமார் பன் சால் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்தும், தடுக்கப்படாத ஒன்றாக உண்ணாவிரத ஏற்பாடுகள் சென்று கொண்டுள்ளன.

அரசு சாரா நிறுவனங்களுக்கு, நிதி வெளிநாடுகளில் இருந்தும், இந்தியப் பெரு முதலாளிகள் நடத்தும் நிறுவனங்களில் இருந்தும் வருகிறது. அதே போல் பாபா ராம் தேவ் போன்றோர் நடத்தும் டிரஸ்டுகளுக்கு, பெரு முதலாளிகள் தான் நிதியை வாரி வழங்குகின்றனர். இந்த தானத்திற்காக வரிவிலக்கும் பெற்றுக் கொள்கிறார்கள். எல்லாவிதங்களிலும் பெரு முதலாளிக ளுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் பிரதி நிதிகள் எப்படி ஊழலுக்கு எதிரான போராட் டத்தைத் தொடர்ந்து நடத்திட முடியும்.

இப்போது ஊழல் அதிகரிப்பிற்கான அடிப்படைக் காரணம் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக அமைச்சர்கள் செயல்பட்டது ஆகும். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நீரா ராடியா, ரத்தன் டாடா உரையாடல்கள் மிகமுக்கிய ஆதாரம். பன்னாட்டு நிறுவனங் களை அறிமுகம் செய்யும் ஏஜெண்டுகளின் செயல்பாடுகளை, ஜான்பெர்க்கின்ஸ் என்ற அமெரிக்கர் “ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம்” மற்றும் “அமெரிக்கப் பேரர சின் ரகசியம்” ஆகிய இரு புத்தகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். கமிஷன் அல்லது அன்பளிப்பு இல்லாமல், எந்த ஒரு புரிந் துணர்வு ஒப்பந்தமும் அமலாவதில்லை என்பது உலகமறிந்த உண்மையாக உறங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஊழல் எதிர்ப்பு என்பது பன்னாட்டு மற்றும் இந்நாட்டு பெரு முதலாளிக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்தது. அத்தகைய பெரு முதலாளி களுக்கு ஆதரவான கொள்கைகளைக் கொண்டுள்ள காங்கிரஸோ, பா.ஜ.கவோ அல் லது அவர்களுடன் இணைந்த மாநிலக் கட்சிகளோ ஊழலுக்கு எதிரான போராட்டத் தினை நடத்தி விட முடியாது. அப்படி நடத்தினால் அது நாடகமே.

எஸ்.கண்ணன்

கருத்துகள் இல்லை: