வியாழன், 5 மே, 2011

2100ல் மக்கள்தொகை ஆயிரம் கோடி! * துயரங்களும் அதிகரிக்கும்

உலக மக்கள் தொகை அடர்த்தி

21ஆம் நூற்றாண்டின் நிறைவில் பூமிப்பந்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஆயிரம் கோடியைத் தாண்டிவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “உலக மக்கள்தொகை வளர்ச்சி பரிசீலனை - 2010” என்ற பெயரில் அறிக்கையொன்றை ஐ.நா.சபை வெளியிட்டிருக்கிறது.

அதிகரிக்கப்போகும் மக்கள்தொகையில் பெரும்பகுதி கருவளம் கொண்டதாகக் கருதப்படும் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 58 நாடுகளிலிருந்துதான் வரப்போகிறது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதா மற்றும் சமூக விவகாரத்துறை இந்த ஆய்வை நடத்தி அறிக்கையாக அளித்திருக்கிறது.

கருவளம் தான் உலக மக்கள் தொகையை அதிகரிக்கும் சக்தியாக இருக்கிறது என்கிறார் அத்துறையின் இயக்குநராகப் பணியாற்றும் ஹனியா லாட்னிக். அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வளவு பேர் மக்கள் தொகையில் சேர்ந்தால் உலகம் நிலைகுலைந்து போய்விடவில்லை. ஆனால், இவ்வாறு அதிகரிக்கும் மக்கள் உலகிலேயே ஏழை நாடுகளாக இருக்கும் பகுதியில்தான் இணைகிறார்கள் என்பதுதான் முக்கியமானதாகும். தற்போது 700 கோடியாக இருக்கும் உலக மக்கள்தொகை, 2023ல் 800 கோடியாகவும், 2041ல் 900 கோடியாகவும், 2081ல் ஆயிரம் கோடியாகவும் மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

2011ம் ஆண்டு முதல் 2100 ஆம் ஆண்டுக்குள், கருவளம் அதிகமாக இருக்கும் நாடுகளின் மக்கள் தொகை தற்போதுள்ளதைவிட மூன்று மடங்காக அதிகரிக்கப்போகிறது. இந்த நாடுகளின் மக்கள்தொகை தற்போது 120 கோடியாக இருக்கிறது.

நூற்றாண்டின் நிறைவில் இந்த எண்ணிக்கை 420 கோடியாக அதிகரிக்கும் என்பது ஐ.நா.சபை அறிக்கையின் கணிப்பாகும். கருவளம் குறைவாக இருக்கும் நாடுகளில் மக்கள்தொகை குறையவுள்ளது. தற்போது 290 கோடியாக இருக்கும் இந் நாடுகளின் மக்கள் தொகை 240 கோடியாகக் குறையும். தற்போது, உலக மக்கள்தொகையில் 42 விழுக்காட்டினர் கருவளம் குறைவாக உள்ள நாடுகளில் வாழ்கிறார்கள். ஐரோப்பாவில் ஐஸ்லாந்து மற்றும் அயர்லாந்து, ஆசியாவில் சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள், அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த 14 நாடுகள், ஆப்பிரிக்காவில் உள்ள இரண்டு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்தான் எஞ்சியுள்ள 58 விழுக்காட்டினரைக் கொண்டவையாகும்.

திட்டமிட்ட கொள்கைமக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு திட்டமிட்ட கொள்கையை அனைத்து நாடுகளும் உருவாக்க வேண்டும் என்று ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூகத்துறை வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்பான அதேவேளையில் உறுதியான குடும்பப் பாதுகாப்பு திட்டங்கள் அவசியம் என்றும், பெண்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வுகள் அதிகமாக வேண்டும் என்றும் ஐ.நா.சபை கூறியுள்ளது.

துயரங்களும் அதிகரிப்பு மக்கள்தொகை அதிகரிப்பது ஏழை நாடுகளில்தான் நடக்கிறது என்பதால், வறுமையும் சேர்ந்தே அதிகரிக்கிறது.

இயற்கை வளம், குறிப்பிட்ட சிலரின் கைவசம் போவதுதான் வறுமைக்குப் பெரிய காரணம் என்பதால், வறுமை ஒழிப்புத் திட்டமிடுதலில், செல்வப் பகிர்வு, வருமானத்திற்கான வழி போன்றவை பிரதான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று சமூகத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: