புதன், 4 பிப்ரவரி, 2009

ஆடட்டும் நடராசர் ஆனந்தத் தாண்டவம்

சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு செயல் அதிகாரியை, அரசு நியமித்தது சட்டப்பூர்வமாக செல்லத்தக்கது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தை திங்களன்று இரவே தமிழக அரசு ஏற்றுக்கொண் டுள்ளது.


சிதம்பரம் நடராசர் கோயில், தில்லைவாழ் அந்தணர்கள் என்று அழைக்கப்படும் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்து வந்தது. தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில், சிதம்பரம் கோயில் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தது. அந்த நடராசரே சிதம்பரம் கோயிலை தங்களுக்கு முறி எழுதிக்கொடுத்தது போன்ற மாயத்தோற்றத்தை தீட்சிதர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். இந்த கோயிலை தங்களது சொந்த சொத்து போல கருதி, சொத்துகள் முழு வதையும் தீட்சிதர்களே அனுபவித்து வந்ததோடு, கோயில் வருமானத்தையும் தாங்களே எடுத்துக் கொண்டனர். உண்டியல் கூட வைக்காமல் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை நேரடி யாக தீட்சிதர்கள் பங்கு போட்டுக் கொண்டனர்.

தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் பாடல் களை கோயிலில் பாட தடை விதித்திருந்த தீட்சிதர்கள், கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முயன்ற ஆறுமுகசாமி என்ற சிவனடியாரை தாக்கிய சம்பவமும் பலமுறை நடந்தது. நடராசரை தரிசிக்க விரும்பிய நந்தன் என்ற தலித் எரித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்ததும் சிதம்பரம் கோயிலில்தான். ஆண்டவனே தீக்குளித்து வருமாறு நந்தனின் கனவில் கூறியதாக புராணக்கதை புனையப்பட்டது. சமரச சுத்த சன்மார்க்க நெறி பேசிய வடலூர் ராமலிங்க வள்ளலாரும் சிதம்பரம் கோயிலில் அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஆண்டவன் கட்டளையிட்டதாகக் கூறி தேவாரம், திருவாசகம் ஆகிய தமிழ் பாடல்கள் சிதம்பரம் கோயிலில் பூட்டப்பட்டு, கரையான்களுக்கு இரையாக்கப்பட்டதும், ராஜராஜ சோழன் காலத்தில்தான் விடுவிக்கப்பட்டது என்பதும் சரித்திர கால சம்பவங்களாகும்.

இந்த நிலையில் சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. 1987ம் ஆண்டு சிதம்பரம் நடரா சர் கோயிலை தமிழக அரசு எடுத்துக் கொண்டு செயல் அதிகாரியை நியமித்தது. ஆனால் இதை எதிர்த்து தீட்சிதர்கள் மேல் முறையீடு செய்தனர். அரசு உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடந்துள் ளதை உறுதி செய்துள்ள நீதிமன்றம், கோயிலில் கணக்கு விபரங்கள் சரியாக பராமரிக்கப்பட வில்லை என்றும், கோயில் நகைகள் ஏராளமாக காணாமல் போய்விட்டது என்று அரசுத்தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்று கூறியுள்ளது.

சிதம்பரம் கோயிலை அரசு ஏற்க வேண்டும் என்றும், இதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. அனைத்துத் துறைகளிலும் ஜனநாயகம் மலர்ந்து வரும் நிலையில், கோயில் நிர்வாகத்தில் மட்டும் தனி உரிமையை அனுமதிக்க முடியாது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வரலாற்று காலம் தொட்டு கறையாக இருந்த ஒன்று சரி செய்யப்பட்டுள்ளது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நீங்க எதுனாச்சும் பண்ணீங்களா இல்லன்னாக்க அதோட வரலாற்று முக்கியம் எப்படி மறந்துச்சு