திங்கள், 20 டிசம்பர், 2010

வன்முறையை மட்டுமே நம்புகிறது திரிணாமுல்!



மேற்குவங்கத்தின் ஜங்கல்மஹால் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு, மாநிலத்தின் பல பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திவரும் மக்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றிற்கு பெருகி வரும் ஆதரவு, ஆசிரியர் கவுன்சில் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வெற்றி போன்றவற்றால் விரக்தியடைந்த திரிணாமுல் காங்கிரஸ், மாணவர் பேரவைத் தேர்தல்களைச் சீர்குலைக்க வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியது. இதற்கு ஹவுரா நகரில் உள்ள பிரபு ஜகத்பந்து கல்லூரியில் இரண்டாவது ஆண்டு மாணவராக இருந்த ஸ்வபன் கோலி பலியாகியுள்ளார்.

வெற்றிலை, பாக்கு கடை வைத்திருப்பவரின் மகனான ஸ்வபன் கோலி நன்கு படிக்கக்கூடியவர். மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவர், அதற்கு இந்திய மாணவர் சங்கத்தில் சேருவதுதான் பொருத்தமானது என்று அதில் இணைந்து பணியாற்றியவர். மாணவர்களின் பிரச்சனைகளுக்காக முன்னின்று போராடிய அவர், ஜகத்பந்து கல்லூரிப் பேரவைத் தேர்தல் என்று வந்தவுடன் மற்ற மாணவர்களாலும், மாணவர் சங்கத்தாலும் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்பாளராக இவர் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே வெற்றி உறுதியாகிவிட்டது என்று மாணவர்கள் மத்தியில் பேசப்பட்டது.

தங்கள் தோல்வி உறுதி என்ற விரக்தியில் ஒட்டுமொத்த தேர்தலையே சீர்குலைத்துவிடுவது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான சத்திர பரிஷத் முடிவு செய்தது. அதற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த குண்டர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். ஸ்வபன் கோலிதான் அவர்களுக்கு முதல் இலக்காக இருந்தார். டிசம்பர் 16 அன்று அவர் குடியிருக்கும் பகுதிக்கு சென்று, வீட்டுக்குள்ளிருந்து அவரை வெளியே இழுத்து வந்த திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் இரும்புக்கம்பிகளால் தாக்கியுள்ளனர். தலையை செங்கற்களால் அடித்து சிதைத்து வெறியாட்டம் ஆடினர். பின்னர் அருகில் இருந்த வாய்க்காலில் அவரது பிணத்i த வீசி எறிந்துவிட்டு ஓடிவிட்டனர். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட திரிணா முல் காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சவுரவ் சந்த்ரா கைது செய்யப் பட் டுள்ளார். மேலும் 13 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்த வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்த அதே நாளில், கொல்கத்தாவின் புறநகர்ப்பகுதியான பவானிப்பூரில் உள்ள அசுதோஷ் கல்லூரியிலும் திரிணாமுல் காங்கிரசார் அட்டூழியம் செய்தனர். இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு மாணவரின் கண்களைக் குருடாக்கும் திட்டத்துடன் தாக்குதல் நடத்தினர். கிட்டத்தட்ட கண் பார்வையையே இழந்த நிலையில் அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதோடு திருப்தியடையாத அவர்கள், சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தில், முதல்வர் புத்ததேவ் பட்
டாச்சார்யாவை முற்றுகையிடப் போகிறோம் என்றும் அறிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கொறடாவாக இருக்கும் சுதீப் பந்தோபாத்யாயா, மம்தாவைக் கொலை செய்ய இந்திய மாணவர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளார்கள் என்று தில்லியில் அமர்ந்து கொண்டே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ்காரர்களின் சதி வேலைகளை மாநில இடது முன்னணியின்தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான பிமன்பாசு அம்பலப்படுத்துகிறார். கல்லூரிகளில் நடந்து வரும் ஜனநாயகப் பூர்வமான நடைமுறை யைச் சீர்குலைக்க வெளியாட்களைக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் இயங்குகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். முதல்வரை முற்றுகையிடப்போகிறோம் என்ற திரிணாமுல் காங்கிரசின் மாணவர் அமைப்பின் முயற்சியையும் அவர் கடுமையாக விமர்சித்தார். இவர்களைத் தூண்டிவிடும் மம்தா பானர்ஜி கடந்த ஆண்டு முதல்வர் வீட்டிற்கு அருகில் அமர்ந்து முரண்டுபிடித்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கொலை செய்யப்பட்ட ஸ்வபன் கோலியின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் முகமது சலீம், ராபின் தேவ் மற்றும் மாநில அமைச்சர் மனப் முகர்ஜி ஆகியோர் ஆறுதல் கூறினர். கொல்கத்தாவில் உள்ள இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்வபனின் உடலுக்கு மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மலரஞ்சலி செலுத்தினார். திரிணாமுல் காங்கிரசின் வெறியாட்டங்களுக்கு மக்கள்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அப்போது பேசிய புத்ததேவ்பட்டாச்சார்யா கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை: