சனி, 1 அக்டோபர், 2011

தனித்து விடப்பட்ட வாச்சாத்தி மக்களை தலை நிமிரச் செய்த தலைவர்கள்

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை அடிவாரத்திலுள்ள வாச்சாத்தி கிராமத்தில் 1992ஆம் ஆண்டு ஜூன் 20ம் தேதி மலைவாழ் பழங்குடி மக்கள் மீது கொடூரமான வன்முறைகள் ஏவப்பட்டன. காவல்துறை, வருவாய் துறை துணையுடன் வனத்துறையினர் நடத்திய அத்துமீறல்களின் உச்சகட்டமாக 18 பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர். வீடுகள், உடைமைகள் நாசமாக்கப்பட்டன. இச்சம்பவம் வெளி உலகுக்கு தெரிந்துவிடாதபடி கிராமத்தில் எவரும் இல்லை என்கிற நிலை உருவாக்கப்பட்டது. 28 குழந்தைகள், 90 பெண்கள், 28 ஆண்கள் உட்பட 133 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். கிராமத்திலிருந்து தப்பி ஓடிய சிலர் மூலம் மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்களுக்கு இத்தகவல்கள் தெரியவந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். அண்ணாமலை, எச்.ஆர். கணேசன், மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் பெ. சண்முகம், பாஷா ஜான், கிருஷ்ணமூர்த்தி, சித்தேரி பொன்னுசாமி, விஸ்வநாதன் ஆகியோர் கிராமத்தை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களை சேலம் சிறையில் சந்தித்து நடந்தவற்றை உறுதி செய்தனர்.

 சித்தேரி பொன்னுசாமி, எம். அண்ணாமலை ஆகியோர் இதுதொடர்பான புகார்களை காவல்துறைக்கும் உயர் அதிகாரிகளுக்கும் கொடுத்தனர். ஆனால், சந்தனக்கட்டை கடத்தியோர் மீது எடுக்கப்பட்ட சாதாரண நடவடிக்கை என்பது போல அன்றைய அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது.

உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த தோழர் ஏ. நல்லசிவன் வாச்சாத்தி கிராமத்திற்கு சென்று நேரில் பார்த்தார். பாதிக்கப்பட்டோரின் துயரங்களை ஊடகங்களிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்து சட்டமன்றத்தில் பேசிய அன்றைய வனத்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், நல்லசிவன் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். அதோடு வாச்சாத்தி மலை உச்சியில் உள்ளது. வயதான நல்லசிவனால் அங்கு போகவே முடியாது என்று ஒரே போடாக போட்டார்.

அதைத் தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்கள் பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பங்கஜவல்லி உள்ளிட்டோரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவராக இருந்த பி.டில்லிபாபுவும் வாச்சாத்தி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நீதிக்கான போராட்டத்தில் கரம் கோர்த்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அரூரிலும் தருமபுரியிலும் ஏராளமான போராட்டங்களை வாச்சாத்தி மக்களுக்கு ஆதரவாக நடத்தின. கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த கே.எம். அரிபட் மற்றும் கே. வரதராசன் ஆகியோர் இப்போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். வாச்சாத்தி மக்களுக்கு பண்டபாத்திரங்களையும் துணிகளையும் தமிழக உழைப்பாளி மக்களிடமிருந்து சிஐடியு, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பெற்றுத்தந்தன. வழக்கு நடத்த தேவையான நிதியை போக்குவரத்து தொழிலாளர்கள், ஓசூர் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் வழங்கினர். வழக்கை விரைவாக நடத்தி முடிக்கக் கோரி கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், பி. டில்லிபாபு தலைமையில் சுமார் ஆயிரம் பேர் அரூரில் மறியல் செய்து கைதானார்கள்.

கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க வந்த வாச்சாத்தி பெண்களுடன் மாதர் சங்க தலைவர்கள் பங்கஜவல்லி, நாகரத்தினம், அண்ணாஜி, பூபதி, வாலிபர் சங்க தலைவர்கள் பி. டில்லிபாபு, எம். மாரிமுத்து, ஏ.குமார் உள்ளிட்டோர் துணைக்கு வந்தனர். பெ. சண்முகம், எம். அண்ணாமலை, மைதிலி சிவராமன், பங்கஜ
வல்லி ஆகிய தலைவர்கள் கூண்டிலேறி சாட்சியமளித்தனர். வனத்துறையினரால் சீரழிக்கப்பட்ட தங்களது வாழ்க்கை, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் உதவியால் புத்துயிர் பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் சாட்சியமாக கூறினார்கள். அவை நீதிமன்ற பதிவுகளாகவும் உள்ளன.

காணாமல் போன அனைத்துக் கட்சிகள்1992 துவக்கத்தில் சித்தேரி மலைப்பகுதி வாச்சாத்தி காப்புக் காட்டிலிருந்து லாரி லாரியாக சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. அதிமுக பிரமுகர்கள் சிலரை சந்தனமரம் கடத்திய லாரிகளுடன் வனத்துறையில் நேர்மையான சில அதிகாரிகள் கைது செய்தனர். அந்த அதி
காரிகளை அதிமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இடமாற்றம் செய்தது. இதற்கு எதிராக அதிமுக அல்லாத அனைத்துக்கட்சிகள் கூட்டாக பல போராட்டங்களை நடத்தின. அதன் எதிரொலியாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அதிகாரிகள் குழு வாச் சாத்திக்கு வருவதாக தகவல் வெளியானது. அதற்குள் பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்துடன் தமிழக வனத்துறையினர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் தான் வாச்சாத்தி சம்பவம் என எம். அண்ணாமலை தீக்கதிருக்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

சந்தனக் கடத்தல் குற்றச்சாட்டை அரசியல் ரீதியாக அதிமுகவுக்கு எதிராக திமுக பயன்படுத்தியது. ஆனால், அதிகாரவர்க்கத்தின் காட்டு தர்பார் நடந்து 19 ஆண்டுகளாக வாச்சாத்தி மக்களுக்கு நீதி கேட்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தவிர திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் காணாமல் போயின. தருமபுரி நீதிமன்றம் 29.9.2011 அன்று அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் தனித்து மிளிர்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

தீர்ப்பின் போதும் பாதுகாப்புவியாழனன்று (செப். 29) வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகத் தொடங்கியதும் தருமபுரி நீதிமன்ற வளாகத்தில் பதட்டம் ஏற்பட்டது. குற்றவாளிகளின் குடும்பத்தினர் வாச்சாத்தி பெண்களுக்கு எதிராகவும் நீதிபதிக்கு எதிராகவும் குரல் எழுப்பத் தொடங்கினார்கள். வாச்சாத்தி மக்களுக்கு அரணாக சிபிஎம் மற்றும் மாதர், வாலிபர், மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் எம். மாரிமுத்து, நாகராஜன், குப்புசாமி, பூபதி, கவிதா, மேரி, முத்து, ஜோதிபாசு, எஸ்.பி. சின்னராசு, எஸ்.கே. கோவிந்தன், நேரு உள்ளிட்ட தலைவர்கள் நின்றனர். வாச்சாத்தி மக்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டலை துணிச்சலுடன் எதிர்கொண்டனர்.

காலம் கடந்தாலும்: வாச்சாத்தி மக்கள் கண்ணீர் மல்க நன்றிசித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமம் வாச்சாத்தி. அரூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த வாச்சாத்தி. இங்குள்ள அனைவரும் மலையாளி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆடு, மாடு மேய்ப்பதே இந்த மக்களின் பிரதான தொழிலாகும். இதை நம்பித்தான் வாழ்க்கையை நகர்த்தினர். வருவாய்த்துறையின் துணையுடன் காவல் மற்றும் வனத்துறையினர் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் புகுந்தனர். அங்கிருந்த அப்பாவி மக்களை தாண்டவமாடியதோடு பாலியல் வன்புணர்ச்சிக்கும் உட்படுத்தினர். இந்தக் கொடூரக்காரர்களின் துன்புறுத்தலுக்கு பயந்து மலையின் உச்சியிலேயே மூன்று மாத காலம் பசியும் பட்டினியுமாக தஞ்சமடைந்திருந்தனர்.

இந்த தகவலை அறிந்த மலைவாழ் மக்கள் சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மாதர் சங்கமும் அந்த மக்களை நேரில் சந்தித்து அவர்களது அச்சத்தைப் போக்கினர். இதனைத் தொடர்ந்து சங்க மற்றும் கட்சித் தலைவர்களின் துணையோடு அந்த மக்கள் வாச்சத்திக்குள் நுழைந்தனர். உடைமைகளை இழந்து பரிதவித்த அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்று நீதிகேட்டு போராடினர்.

அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகாலம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, வியாழனன்று (செப். 29) தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரகுருவின் தீர்ப்பு வெளியானதும் வாச்சாத்தி கிராம மக்களும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

காலம் கடந்து தீர்ப்பு வந்தாலும் ஓரளவிற்கு நியாயம் கிடைத்திருப்பதோடு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு அன்று முதல் இன்று வரையிலும் தோளோடு தோள் நின்றமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம், மாதர் சங்கத் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக பெண்கள் கூறினர்.

வாச்சாத்தியிலிருந்து வந்திருந்த அனைவரும் கண் கலங்கியதோடு மார்க்சிஸ்ட் கட்சிக்கும் மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தது. நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரின் உள்ளத்தையும் நெகிழ வைத்தது.

பரந்தாயி எங்க ஊரையே அடிச்சி துன்புறுத்தி பொண்ணுங்களெல்லா கற்ப்பழிச்சாங்க. ஊரையே கொண்டுபோயி சிறையில தள்ளுனாங்க. நிர்வாணப்படுத்தி நிக்க வைச்சி கொடும பண்ணாங்க. இத்தனைக் கொடுமையும் தாங்கிக்கினு நாங்க உசுர கையில புடிச்சி உங்க முன்னால நிக்குரோம்னா அதுக்குக் காரணமே இந்த கம்யூனிஸ்ட் கட்சிதா (சிபிஎம்) காரணம். அவங்கதா இந்த நல்ல தீர்ப்பு வாங்கிக் கொடுத்திருக்காங்க என்று கண் கலங்கினார்.

கண்ணகி நெருப்புல சுட்டாக் கூட வடு மாறிடும் ஆனா எங்கல அந்தப் ஃபாரஸ்ட்டுக் காரங்க திட்டுன வார்த்தையும் அடிச்ச அடியும் இன்னமும் நெஞ்சுல ஆராத காயமா இருக்கு. மலைவாழ் சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும்தா இந்தத் தீர்ப்பு மூலம் எங்க காயத்துக்கு மருந்து கொடுத்திருக்காங்க என்று கண்ணீர் மல்க நன்றித் தெரிவித்தார்.

முருகன்18 வருஷத்துக்கு முன்னாடி எங்க கிராமத்துலஅந்த ஃபாரஸ்ட்டுக்காரங்க அடிச்ச அடியால இன்னமு என்னால நடக்கக் கூட முடியல. அந்த அளவுக்கு உடம்பு புல்லா எனக்கு காயம். அதோடு மட்டுமில்ல, ஃபாரஸ்ட்டுக்காரங்க போட்ட பொய் கேசால 3 மாசம் ஜெயில்ல இருந்த. என் பொன்ஜாதி புள்ளைங்கல கூட பார்க்க விடல, அப்படி என்ன துன்புறுத்துனாங்க. கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியாலதான் நா ஜெயில்ல இருந்து வெளிய வந்த. அரசாங்கத்தான்ட இருந்து ஒன்றரை கோடி ரூபாய் நிவாரணமும் வாங்கித் தந்தாங்க. நான் உயிரோடு உள்ளவரை மலைவாழ் மக்கள் சங்கத்துக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நன்றி உள்ளவனாக இருப்ப என்று கண் கலங்கினார்.


கருத்துகள் இல்லை: