வியாழன், 1 ஜூலை, 2010

கூட்டாட்சிதான் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு மதுரை கருத்தரங்கில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

இலங்கையில் சிங்கள ஆட்சி முறை தொடருமானால், பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது. ஆகவே,சிங்களர்-தமிழர் இணைந்த கூட்டாட்சி முறைதான் பிரச்ச னைக்குத் தீர்வாக இருக்க முடியும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச் சூரி எம்.பி கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்-புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் இலங்கைத் தமி ழர் பிரச்சனைக்குத் தீர்வு குறித்த சிறப்பு கருத் தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சீத்தாராம் யெச்சூரி எம்.பி பேசிய தாவது:

முள்வேலி முகாமில் 1 லட்சம் தமிழர்கள்

இலங்கையில் வாழும் தமிழர்கள் முழு உரிமையோடு வாழ வேண்டும் என்பதைத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பு கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அர சியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த தீர்வைக் காண முடியாததற்கு பல காரணங்கள் உள் ளன. இதில் இலங்கை அரசின் செயல்பாடு முக்கிய காரணமாக உள்ளது. எல்டிடிஇ-யினருக் கும், சாதாரண தமிழ் மக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் இலங்கை அரசு உணர வேண்டும். ஆனால் அதை உணர்ந்து கொள்ள இலங்கை அரசு மறுக்கிறது.

சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவிற்கு, குடியரசுத்தலை வர் மாளிகையில் விருந்தளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண் டேன். இலங்கைத் தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ப துடன், அங்குள்ள தமிழர்கள் அமைதியான முறையில் வாழ அனைத்து நிவாரண உதவி களையும் இலங்கை அரசு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ராஜபக் சேவிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது. இலங் கை குறித்து உலகத்தில் இருந்து வரும் பல செய்திகள் நம்மை கவலை கொள்ளவைக் கிறது. இலங்கை முள்வேலி முகாமில் இன் னும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதி களாக வசிப்பதாகவும், இன்னமும் அவர் களின் வாழிடங்களுக்கு அனுப்ப இலங்கை அரசு வழிவகை செய்யவில்லை என்ற தகவல்களை அனைத்து நாடுகளும் கவலை யோடு பார்க்கின்றன.

இலங்கை அரசு, அங்கு வாழும் தமிழர்க ளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வ தாகச் சொன்னது. தற்போது அங்கு நடை பெறும் நிவாரணப்பணிகள் எந்த அளவில் உள்ளது என அறிய நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சிக் கொண்ட குழு அமைத்து இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இப்படி சென்றால் தான், இலங்கையின் உண்மை நிலையை அறிய முடியும்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எந்தந்த நாடு களைக் காலனியாக வைத்திருந்ததோ அந்த நாட்டு மக்களைத் துண்டாடித் துயரத்தில் சிக்க வைத்து விட்டுச் சென்றது. இன்னும் பாலஸ்தீனம், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.சைப்ரஸ் நாடும் பிரிக்கப்பட் டது. இந்தியாவும் துண்டாடப்பட்டது. தற் போது அதற்கு இலங்கை நல்ல உதா ரணமாகத் திகழ்கிறது.

சம உரிமைக்கான போராட்டம்

இலங்கையில் 77 சதவீத சிங்களர்கள் வசிக்கின்றனர். பல்வேறு அரசுகள் அங்கு அமைந்தாலும் சிங்களர்களையும், புத்த மதத்தையும் தான் திருப்திப்படுத்தியுள்ளன. தமிழர்கள் மற்றும் சிறுபான்மை மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. அதைத் தொடர்ந்துதான் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் மோதல் நிகழத் துவங்கியது. இலங்கைத் தமிழர்கள் கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாக தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் முதலில் சமஉரிமை என்ற முழக்கத்துடன் ஆரம்பமானது. அதை அரசு புறக்கணித்ததால் அக்கோரிக்கை தனிநாடு கோரிக்கையாக மாறியது. இதுமட்டு மின்றி இலங்கை அரசு கொண்டு வந்த அரசியல் சட்டமாற்றம் தமிழர்களை வேறு படுத்திப் பார்த்தது. சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்த மதம் தான் அரசு மதம் என அறி விக்கப்பட்டது. தமிழர்களுக்கும், சிறுபான் மையினருக்கும் எதிராக மாறியது.

ஆரம்பக் காலத்தில் இலங்கைத் தமிழ் அமைப்புகள், அரசு அமைப்புகளின் கீழ் தங்க ளுடைய உரிமைகளைக் கேட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி(டியுஎல்எப்) உருவானது. பிறகு அது உடைந்து எல்டிடிஇ உள்ளிட்ட 6 அமைப்புகள் உருவாகின. எல்டிடிஇ அரசியல் தீர்வை ஏற்காமல், தனிநாடு கோரிக் கையை முன்வைத்தது. இந்த அமைப்பு இப்பிரச்சனையைக் கையில் எடுத்தவுடன் மற்ற தமிழ்க்குழுக்களைத் தாக்க ஆரம்பித் தது. ஈபிஆர்எல்எப் பத்மநாபா, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங் கம் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்பின் தலைவர்களை எல்டிடிஇ கொன்று குவித்தது. நிலைமை மோசமான தால் இலங்கைப்பிரச்சனை என்பது எல்டி டிஇ கையில் சிக்கியது. ஒருபுறம் ஜெயவர்த் தனேயின் இனவெறிக்கொள்கையும், மறுபுறம் தமிழீழ போராட்டம் நடைபெற்ற போது, அப் பாவி மக்கள் இடையில் சிக்கிக் கொண்டனர். இலங்கை அரசு, எல்டிடிஇ மீது தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் நடத்தியத் தாக்குதல்களில் சாதாரண மக்கள் சொல் லொண்ணா துயரத்திற்கு உள்ளானார்கள்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந் தியா அரசு பலமுறை தலையீடு செய்துள்ளது. 1960ம் ஆண்டு ஒரு ஒப்பந்தமும், 1987-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தமும் இலங்கை, இந்திய அரசுகள் செய்து கொண்டன. இந்த உடன் படிக்கையின் ஷரத்துகளை இலங்கை அரசு அமல்படுத்தவில்லை. எல்டிடிஇ இந்த ஒப் பந்தங்களை ஏற்கவில்லை. இந்த ஒப்பந் தங்களை நிறைவேற்றியிருந்தாலே இலங் கைப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத் திருக்கும்.

இலங்கை அரசு போர்க்கால நடவடிக்கை களை கைவிட்டு, தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையைத் துவங்க வேண்டும். அத்துடன் தமிழர்களுக்குரிய உரி மைகளை வழங்க வேண்டும். இதற்கு இந்திய அரசு தன்னுடைய அளவில் தலையிட முன் வரவேண்டும். இலங்கையில் சிங்கள ஆட்சி முறை தொடருமானால், பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது. ஆகவே, கூட்டாட்சி முறை தான் பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க முடியும். இலங்கையில் தற்போது அவதிப் பட்டுவரும் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்யப்பட வேண்டும். அத்துடன் இலங்கையில் நடைபெறும் நிவாரண நடவ டிக்கைகளைக் கண்காணிக்க பன்னாட்டு அமைப்பு தேவைப்படுகிறது. புலம் பெயர்ந்த தமிழர்களை அவர்கள் வசித்து வந்த பகுதி களில் குடியமர்த்த வேண்டும். ஏனெனில், தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்கள் திட்டமிட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். இது மேலும் இனமோதலை உருவாக்கும். இந் நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத் தப்பட வேண்டும். இல்லாவிட்டால் இஸ் ரேல், பாலஸ்தீனம் போல பெரும் மோதல் உரு வாகும். அத்துடன் தமிழர்களுக்கு தொழில் துவங்க வங்கி கடனுதவி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்கு முழு சுயாட்சி வழங்க வேண் டும். அப்படி செய்தால் தான் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.

இலங்கை அரசு தமிழ் மொழியை ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக ஏற்க வேண் டும். அப்போது தான் தமிழர்களுக்கு அந்த நாட்டு அரசின் மீது நம்பிக்கை ஏற்படும். சிங்களர், தமிழர் பிரச்சனைக்கு முடிவு காண முடியும். இதைவிடுத்து தமிழத்தில் இருந்து உணர்ச்சிவசப்பட்டு எழுப்படும் வெற்று கோஷங்கள் எந்தப்பயனையும் தராது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

கருத்துகள் இல்லை: