வெள்ளி, 30 ஜூலை, 2010

மீண்டும் வெல்வது உறுதி

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975-ல் அவசரநிலைப் பிரகடனத் தைக் கொண்டு வந்தார். நாடு முழுவதும் எதேச்சதிகார ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டார். ஆனால், மேற்கு வங்கத்திலோ இந்தத் தாக்குதல் 1970-லேயே தொடங்கிவிட்டது. இத்தகைய வன்முறைக்கு 1970-லிருந்து 1977 வரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள், ஜனநாயகம் காக்க நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பலி யானார்கள்.

இந்தப் போராட்டத்தின் விளைவாகத் தான் 1977-ல் இடது முன்னணி பங்கேற்கும் அரசும், பின்னர் இடது முன்னணி அரசும் உருவாகி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து வருகிறது. இந்த 30 ஆண்டு காலத்தில் இடது முன்னணி அரசு, ஏழைகள் சார்பாகச் செயல்பட்டது என்பதற்கு கீழ்க்கண்ட சில விவரங்கள் எடுத்துக்காட் டாகத் திகழ்கின்றன.

நாட்டில் வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் தீர வேண்டுமானால், நிலச் சீர்திருத்தங்கள் மூலம் நிலங்களை ஏழை விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர் களுக்கும் விநியோகம் செய்வதன் மூலமே சாத்தியமாகும் என்று சமூக நீதி கோரி அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் அழுத்தந் திருத்தமாகக் கூறியுள்ளது.

2004 ஆகஸ்ட் 19 அன்று நாடாளுமன்ற மக்களவையில் அரசு வெளியிட்டுள்ள கணக் கின்படி நாட்டில் 73 லட்சத்து 35 ஆயிரத்து 937 ஏக்கர் உபரி நிலம் என்று பிரகடனப்படுத் தப்பட்டு, 64 லட்சத்து 96 ஆயிரத்து 471 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் 54 லட்சத்து 2 ஆயிரத்து 102 ஏக்கர் விவசாயிக ளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் 10 லட் சத்து 88 ஆயிரத்து 445 ஏக்கர் நிலம் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சுமார் 20 சதவீதத்துக்கும் மேல் மேற்கு வங்கத்தில் மட்டும் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் 1977-ல் இடதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது பதிவு செய்யப்பட்டிருந்த குத்தகை விவசாயிகளின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் குறைவே யாகும். ஆனால், இப்போது அங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிற குத்தகை விவசாயி களின் எண்ணிக்கை 14 லட்சத்து 50 ஆயி ரமாகும். இன்றைய தினம் மேற்கு வங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குத்தகை விவ சாயிகளின் எண்ணிக்கை 15 லட்சத்திலி ருந்து 20 லட்சம் வரை இருக்கும் என்று கொல்கத்தாவில் உள்ள ஒரு சமூக அறிவியல் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.

இடதுசாரி அரசாங்கங்கள் நிலச்சீர்திருத் தம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைக ளில் மிக முக்கிய அம்சம் என்பது பினாமி நிலங்களையும், உபரி நிலங்களையும் கைய கப்படுத்தி, நிலமற்ற விவசாயிகளுக்கு விநி யோகம் செய்ததேயாகும். கடந்த 30 ஆண்டு களில் மேற்கு வங்க அரசு கையகப்படுத்திய நிலத்தின் அளவு 13.37 லட்சம் ஏக்கர்களாகும். இதில் 10.63 லட்சம் ஏக்கர் நிலங்களை மேற்கு வங்க அரசு நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகம் செய்து கொடுத்துள்ளது. இதன் மூலமாக 26.43 லட்சம் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர் களில் 47 சதவீதத்தினர் தலித்துகள், பழங் குடியினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினரா வார்கள். எனவேதான் நாட்டில் கையகப்படுத் தப்பட்ட நிலங்களில் 18 சதவீதமும், விவசாயி களுக்கு விநியோகிக்கப்பட்ட மொத்த நிலங்க ளில் 20 சதவீதமும் மேற்கு வங்கத்தில் இருக் கிறது என்று சொல்லும்போது அது விந்தை யாக இல்லாமல் இருக்கிறது.

அடுத்து, மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக எதிரிகள் வைக்கும் பிரதானக் குற்றச்சாட்டு, மேற்கு வங்கத்தில் நிலம் அளித்திருக்கலாம். ஆனால், தொழில்துறை பின்தங்கிவிட்டது. கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருக்கும்வரை எந்த முதலாளியும் இங்கே தொழில் தொடங்க வரமாட்டார். தொழிற்சங்கங்களை வைத்து அனைவரையும் இவர்கள் மிரட்டி விரட்டி விடுவார்கள். ஆகவே, இவர்கள் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் தொழில்கள் வள ராது என்பது தினம் தினம் எதிர்க்கட்சிகள் வாசித்த குற்றச்சாட்டுகளாகும்.

ஆனால், உண்மை நிலை என்ன? மேற்கு வங்கத்தில் தொழில்மய வளர்ச்சியில் குறிப் பிடத்தக்க அம்சம் என்னவெனில் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தொழில்களுக் கிடையே சமச்சீரான வளர்ச்சியை மேற்கு வங்க இடது முன்னணி அரசு மேற்கொண் டிருப்பதாகும்.

1992-93-ம் ஆண்டில் மேற்கு வங்கத் தில் சராசரி ஆண்டு முதலீடு என்பது 450 கோடி ரூபாயாக இருந்ததானது, 2000-2005-ல் 2,200 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதன் காரணமாக நாட்டிலேயே சிறிய தொழில் களில் அதிக முதலீடு செய்துள்ள மாநிலங்க ளில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்களில் முதலீடு செய்துள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

உணவு உற்பத்தியில் பற்றாக்குறை மாநி லமாக இருந்த மேற்கு வங்கத்தில் தன்னி றைவு ஏற்பட்டு இன்றைய தினம் உணவு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. நாட் டில் அரிசி உற்பத்தியில் அதிக அளவில் -சுமார் 20 சதவீதம் - மேற்கு வங்கம் உற்பத்தி செய்கிறது. நிலச் சீர்திருத்தம், குத்தகை விவசாயிகளுக்கு நிலத்தில் உரிமைகள் வழங் கியதே இதற்கு முக்கிய காரணங் களாகும்.

உணவு உற்பத்தித் திறன் என்பதும் பஞ் சாப், ஹரியானாவுக்கு அடுத்ததாக மேற்கு வங்கத்தில்தான் இருக்கிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளப்படுவது நாள்தோறும் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக் கின்றன. ஆனால், மேற்கு வங்கத்தில் விவ சாயிகள் தற்கொலை என்பது முற்றிலுமாகக் கிடையாது.

இந்தியா பூராவும் பெரும்பான்மையான மாநிலங்களில் பஞ்சாயத்துக்கு அதிகாரம் என்பது அந்த ஊரின் வசதி படைத்தவர் கையில்தான் உள்ளது. பஞ்சாயத்து அமைப் புகளில் ஏழைகள் தலைவர்களாக வீற்றிருப் பது என்பதும், இடதுமுன்னணி அரசுகள் உள்ள மேற்குவங்கம், கேரளம் மற்றும் திரிபுரா வில்தான். வேறெந்த மாநிலத்திலும் இத னைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.

மாநில அரசின் பட்ஜெட் தொகையில் 50 சதவீதம் பஞ்சாயத்துகள் மூலமாகப் பயன் படுத்தப்படுகின்றன. மக்களின் கையில் அதிகாரத்தைப் பஞ்சாயத்து அமைப்பு முறை வாயிலாக வழங்கியிருப்பதன் மூலம் மேற்கு வங்க பஞ்சாயத்து அமைப்புமுறை நாட்டுக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண் டிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்துக்கு மிக அருகில் உள்ள தம்லுக் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ள சுபேந்து அதிகாரி என்பவர், நந்திகிராமம் பகுதியில் தங்கி, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டி ருந்த மாவோயிஸ்டுகளுக்கு ஆயிரம் தோட் டாக்களுக்கு மேல் விநியோகித்திருக்கிறார் என்று மேற்கு வங்க குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த காவல்துறையினர் கூறுகின்றனர்.

சுபேந்து அதிகாரியும், இவரது தந்தையும் இப்போது மத்திய இணை அமைச்சராகவும் இருக்கிற சிசிர் குமார் அதிகாரியும் நந்தி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தல் சம்பந்த மாக இடது முன்னணிக்கு எதிராக நடை பெற்ற போராட்டத்தில் முன்னணியில் நின்ற வர்கள். அப்போதுதான் முதன்முதலாக 2007 மார்ச் மாதத்தில் காவல்துறையினர் போராட் டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை அடுத்து அதே இடத் தில் ஆகஸ்டில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது.

சிஐடி போலீசார், நந்திகிராமம், மாவோ யிஸ்ட் மண்டலக் குழுச் செயலர் மதுசூதன் மண்டாய் என்பவரை விசாரித்தபோது, அவர் 2007 மார்ச் மாதத்துக்குப் பிறகுதான் நந்தி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் தளம் அமைத் ததாகவும், திரிணாமுல் காங்கிரஸின் உதவியு டன் அங்குள்ள முன்னணி ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அத்தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லெக்ஷ் மண் சேத்தையும் கொல்லத் திட்டமிட்டிருந் ததாகவும் கூறியிருக்கிறார் மண்டாய். இதன் மூலம் ரவுடியிசத்தையும், வன்முறையையும் பயன்படுத்திக் கொண்டிருப்பது யார் என்பது தெளிவாகிறது.

மேலும், சில நாள்களுக்கு முன்பு வெளி யான கட்டுரை ஒன்றில், தேர்தல் என்று வந் தால் மஸ்தான்களின் உதவியுடன் ஓட்டுச் சாவடியைக் கைப்பற்றுதலில் தொடங்கி, பல வாக்காளர்களைப் பயமுறுத்தி ஓட்டளிக்கச் செய்யும் கலையை மார்க்சிஸ்ட் கூட காங் கிரஸ் பாணியில் தனதாக்கிக் கொண்டது என் றும், தில்லுமுல்லு நடவடிக்கைகளால்தான் தேர்தல்களைச் சந்தித்து வெற்றிபெற முடியும் என்ற கொள்கை முடிவை ஏற்று கம்யூனிசம், ஜனநாயகம் ஆகியவற்றின் மேன்மையான தத்துவங்களைக் கைவிட்டுவிட்டனர் நமது மார்க்சிஸ்ட் தோழர்கள் என்றும் ஓர் அபாண் டமான குற்றச்சாட்டு கூறப்பட்டது.

கடந்த முப்பதாண்டு காலமாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தேர்தலுக்குத் தேர்தல் வைக்கும் ஒப்பாரி தான் இது. கடந்த தேர்தலின்போது தேர்தல் ஆணையத்துக்கும் இவர்கள் முறையிட்டு, தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்புக்குக் காவல்துறை யினர் அனைவரும் வெளி மாநிலங்களிலி ருந்து கொண்டுவருவதென்று முடிவு செய்து கொண்டுவரப்பட்டது. இதற்குத் தேர்தல் ஆணையம் சொல்லிய காரணம், மாநில நிர் வாகம் இடது முன்னணிக்கு ஆதரவாக இருப் பதாகப் புகார்கள் வந்துள்ளன என்பதாகும்.

இதுபற்றி மேற்கு வங்க முதல்வர் புத்த தேவ் பட்டாச்சார்யாவிடம் கேட்டபோது, “எங் களுக்கு ஆட்சேபம் இல்லை. வாக்களிக்கப் போகிறவர்கள் மேற்கு வங்க மக்கள்தானே யொழிய, அதிகாரிகள் அல்லவே’’ என்றார். அந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல் லாத அளவுக்கு அதிக சதவிகித வித்தியா சத்தில் இடது முன்னணி வெற்றி பெற்றது.

மேற்கு வங்கத்தில் மக்களின் துன்ப துய ரங்களை முற்றிலுமாகப் போக்க வேண்டுமா னால் இன்றைய தினம் தொழில்மயம் அவ சியம் என்பதைக் கட்சி உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. தொழில்மயத் திலும் மேற்கு வங்கம் முன்னேறிவிட்டால், இடது முன்னணியை பின் எவராலும் அசைத் திட முடியாது என்பதை நன்கு உணர்ந்த பிற் போக்கு சக்திகள்தான் ரவுடியிசத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சி முன்னணி ஊழியர்களை அங்கே கொன்று குவித்து வருகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர்களை, விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் முன் னணிப் படையாகும். இதில் ரௌடிகளுக்கோ, மஸ்தான்களுக்கோ எந்தக் காலத்திலும் இடம் கிடையாது. எனவே, மக்களின் பேராதரவுடன் மார்க்சிஸ்ட் கட்சி வருகிற தேர்தலிலும் வெற்றி வாகை சூடும் என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை.

-கே.வரதராசன்

நன்றி : தினமணி

கருத்துகள் இல்லை: